டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மிகச் சிறந்த ராஜதந்திரியாகவும் விளங்கினார். பாகிஸ்தானுடன் பிரச்னை இருந்தபோதும், 2004ல் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்தார்.
மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய் உடல்நலக் குறைவால், டெல்லியில் இன்று காலமானார். அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்.
அதில் மிக முக்கியமானது, 2004ல் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது என்ற முடிவுதான். இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எங்கு, எப்போது நடந்தாலும் அதில் பரபரப்பு, எதிர்பார்ப்பு இருக்கும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு முழுமையான தொடரில விளையாட இந்திய அணி, 2004ல் சென்றது. கேப்டன் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், ஜாகிர் கான், லட்சுமிபதி பாலாஜி, இர்பான் பதான் என மிகவும் வலுமையான அணி சென்றது.
வரலாற்று சிறப்புமிக்க அந்த தொடருக்கு செல்லும் முன், கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசினார் பிரதமராக இருந்த வாஜ்பாய். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களுடன் செலவிட்ட அவர், விளையாட்டில் மட்டுமல்ல, மனங்களையும் வென்று வாருங்கள் என்று கேப்டன் கங்குலி மற்றும் அணியிடம் வலியுறுத்தினார். அந்த வார்த்தைகள் பொறித்த பேட்டையும் கங்குலிக்கு பரிசாக அளித்தார்.
பாகிஸ்தான் பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்றும், ஒருதினப் போட்டித் தொடரை 3-2 என்றும் இந்தியா வென்றது. இந்தத் தொடரின்போது, இந்திய வீரர்களை பாகிஸ்தான் அரசு விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டது. இதுதான் வாஜ்பாயியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இன்றும் அந்தத் தொடர் பேசப்பட்டு வருகிறது.