ஷாஹித் அப்ரிடி
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மீண்டும் வீரியத்துடன் பரவி வருவதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் உலகின் பிரபலமான முன்னாள் பாகிஸ்தான் வீரரான ஷாஹித் அப்ரிடியையும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
அப்ரிடி பிரபலமான கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தி கிரிக்கெட்டை முதன்மையான விளையாட்டாக ஆடும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்து வீரர்கள்
கிரிக்கெட் மட்டுமில்லாமல், பல்வேறு விளையாட்டுக்களிலும் முக்கிய வீரர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர். பல முன்னணி கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆர்சினல் அணியின் பயிற்சியாளர் மிக்கேல் ஆர்டேடா மார்ச் மாதமே பாதிப்புக்கு உள்ளானார். அவரால் மொத்த அணியும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
யுவெண்டஸ் வீரர்
யுவெண்டஸ் அணியின் முன்னணி வீரர் பாலோ டைபலா மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அதே அணியில் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடி வரும் நிலையில் இந்த செய்தியும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலோ டைபலா பின்னர் பாதிப்பில் இருந்து மீண்டார்.
அமெரிக்க டென்னிஸ் வீரர்
மேலும், முக்கிய கால்பந்து வீரர்களான பிளேஸ் மாட்டோடி, மருவான் பெல்லாணி, கல்லும் ஹுட்சன், அட்ரியன் மரியப்பா ஆகியோரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்க டென்னிஸ் வீரரான பேட்ரிக் மெக்என்றோ பாதிக்கப்பட்டு, பின் வேகமாக தேறினார்.
கூடைப்பந்து வீரர்
அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டின் முன்னணி வீரர்கள் கெவின் டுரான்ட், மார்கஸ் ஸ்மார்ட் பாதிக்கப்பட்டது ரசிகர்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சில கூடைப்பந்து வீரர்களும் பாதிக்கப்பட்டனர். அதனால், பல அணிகள் தனிமையில் வைக்கப்பட்டன.
யூ.எஃப்.சி வீரர்
பிரபலமான கலப்பு தற்காப்புக் கலை மோதல் நிகழ்ச்சியான யூ.எஃப்.சியை சேர்ந்த வீரர் ரொனால்ட் சூசா போட்டியில் பங்கேற்கும் முன் செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது தெரிய வந்தது. இங்கே கூறப்பட்டுள்ளது சிறிய பட்டியல் தான். இன்னும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.