சென்னை: நவம்பர் 26-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் 2-1 என்ற தொடர் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய நிலையில், அவருக்கு இந்த கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு டி20 அணியின் துணை கேப்டனாக அனுபவ வீரர் நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இது அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு அணி, டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பிரிவில் ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா, ஜார்கண்ட் மற்றும் சௌராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.