உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்தி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைத்த அமித் மிஸ்ரா
மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டார் என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வெளிப்படையாக விமர்சித்துள்ளார். 'மிஸ்ட்ரி ஸ்பின்' மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறப் போதுமானதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் அபாரமாகச் செயல்பட்டாலும், உலகக்கோப்பையில் நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர் தனது இயல்பான பந்துவீச்சைக் கைவிட்டுவிட்டார் என்று அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். "ஐபிஎல் தொடரில் அவர் மெதுவான பந்து, டாப் ஸ்பின், கூக்ளி மற்றும் லெக் ஸ்பின் எனப் பல வித்தியாசமான பந்துகளைப் பயன்படுத்தினார். ஆனால் உலகக்கோப்பையில் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கும் போது, அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பந்துகளை மிகவும் வேகமாக வீசத் தொடங்கினார். தனது உண்மையான பலத்தை விட்டு விலகியதே அவர் செய்த தவறு" என்று அமித் மிஸ்ரா கூறினார்.

பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம்
டி20 கிரிக்கெட்டில் தற்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடி வந்த ரிவர்ஸ் ஸ்வீப், பேடல் ஸ்வீப் போன்ற ஷாட்களை தற்போது இந்திய வீரர்களும் மிகச் சாதாரணமாக விளையாடுகின்றனர். இதனால் 190, 200 மற்றும் 250 ரன்கள் குவிப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. முதல் 12 பந்துகளிலேயே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து விடுகின்றனர். இத்தகைய கடினமான சூழலில், சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது அடிப்படை பலமான பந்தை 'ஸ்பின்' செய்வதை ஒருபோதும் கைவிடக் கூடாது. ஆடுகளம் சாதகமாக இருக்கும்போது மிகவும் எளிமையான முறையில், பந்தைச் சரியான திசையில் வீசுவதே சிறந்த முடிவாகும் என மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.
இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை
கிரிக்கெட்டில் இடதுகை ஸ்பின்னர் இடதுகை பேட்ஸ்மேனுக்கும், ஆஃப் ஸ்பின்னர் வலதுகை பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசக் கூடாது என்ற தரவு அடிப்படையிலான யுக்திகளைத் தான் நம்புவதில்லை என்று அமித் மிஸ்ரா கூறினார். திறமை இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் பந்துவீசலாம். ரஷித் கான் தொடர்ந்து 100 கிலோமீட்டர் வேகத்தில் தனது பலத்தை மட்டும் நம்பிப் பந்துவீசுவதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் சீசனில் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் அவர்கள் தங்களது பந்துவீச்சில் என்ன புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் உண்மையான திறமை வெளிப்படும் என அமித் மிஸ்ரா இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.


Click it and Unblock the Notifications