சென்னை: தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். அவர் அணியின் மிகப்பெரிய "மதிப்புமிக்க வீரர்" (MVP) என்றும், அணி அவருக்கு வாய்ப்பளிக்கும் போதெல்லாம் அவரின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், "வருண் சக்ரவர்த்தியைத்தான் நான் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்வேன். அவர் ஒரு மகத்தான MVP. அணி அவரைப் பயன்படுத்திய போதெல்லாம், அந்த X-காரணியை வெளிப்படுத்தினார். அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது," என்று குறிப்பிட்டார்.

"2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகளுக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. மேலும், அவர் ஒரு முழுமையான டி20 பந்துவீச்சாளர்," என்றும் அஷ்வின் சுட்டிக்காட்டினார். கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு உச்சத்தை எட்டியதை அஷ்வின் நினைவு கூர்ந்தார்.
சக்ரவர்த்தியின் கிரிக்கெட் பயணம் குறித்து பேசிய அஸ்வின், "அவர் முதலில் ஒரு கட்டிடக் கலைஞர். கிரிக்கெட் அவரது முதல் தொழில் அல்ல. சென்னையில் ஐந்தாம் டிவிஷனில் சுழற்பந்து வீசத் தொடங்கி, வலைப்பயிற்சியில் பந்துவீச வாய்ப்புக் கேட்டு, சிறப்பாகச் செயல்பட்டார். பிறகு TNPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்) போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இது ஒரு மறக்க முடியாத பயணம்," எனப் புகழ்ந்தார்.
"இந்தியக் கண்ணோட்டத்தில், வருண் சக்ரவர்த்திதான் இந்த ஆண்டுக்கான எனக்குரிய சிறந்த பந்துவீச்சாளர்," என மீண்டும் வலியுறுத்தினார். வருண் சக்ரவர்த்தி, இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், 20 டி20 சர்வதேசப் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் நம்பகமான விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
வருண் சக்ரவர்த்தியைப் போலவே, ரவிச்சந்திரன் அஷ்வின் இளம் இடது கை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவையும் வெகுவாகப் பாராட்டினார். அவரை இந்தியாவின் அடுத்த தலைமுறை "எக்ஸ்-ஃபாக்டர்" வீரராகக் கணித்துள்ளார். "2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்பட்ட ஒரு வீரரை நான் குறிப்பிட வேண்டுமென்றால், அது அவராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் மிகச் சிறப்பாக பேட் செய்துள்ளார்," என்று அஷ்வின் மேலும் கூறினார்.
அபிஷேக் ஷர்மா, 2025 ஆம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அபாரமான பார்மையைக் வெளிப்படுத்தினார். 21 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் மொத்தம் 859 ரன்களைக் குவித்தார். அவரது சராசரி 42.95 ஆகவும், மிகவும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் 193.46 ஆகவும் இருந்தது.
"இந்தியாவின் பவர்பிளே பேட்டிங்கை அவர் மாற்றியுள்ளார். அவரது ஆட்டம் விதிவிலக்கானது. ஒருநாள் போட்டியிலும் அவரைப் பார்க்க விரும்புகிறேன். அவரது சிவப்பு பந்து திறன்கள் மேம்படுத்தப்படும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் அணிக்கான வீரராக அவர் இருப்பார் என்று நம்புகிறேன்," என அஷ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்துப் பேசிய அஷ்வின், "50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகம் இருவரிடமும் இன்னும் உள்ளது, அவர்கள் தங்கள் அனைத்து முயற்சிகளையும் செலுத்தி வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு வழங்கும் ஒவ்வொரு போட்டியையும் நாம் ரசிப்பது முக்கியம்," என்றார்.
"பல வழிகளில், அவர்கள் இந்த ஆண்டை மாற்றியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், அது எளிதான ஒன்றாக இல்லை. அவர்களின் வாய்ப்புகள் குறித்து நிறையப் பேசப்பட்டன, ஆனால் அவர்கள் சிறப்பாக மீண்டு வந்து ஒருநாள் தொடர்களில் மிக நன்றாக விளையாடினர்," என்று அஷ்வின் குறிப்பிட்டார்.
"விராட் சிறந்த பார்மில் இருக்கிறார், இது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய பிளஸ்," என்றும் அஷ்வின் மேலும் கூறினார். தற்போது நடந்து வரும் விஜய் ஹஸாரே டிராபி தொடரிலும் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அற்புதமான ஃபார்மில் உள்ளனர். ரோஹித் மும்பைக்காக 155 ரன்கள் குவித்து அசத்தினார். அதே சமயம், விராட் கோலி இத்தொடரில் 131 மற்றும் 77 ரன்கள் எடுத்துள்ளார்.