மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு வீறுநடை போட்டுள்ளது. அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை முழுமையாகப் பயன்படுத்தாதது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்கள் மட்டுமே வீசி 14 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், அவருக்கான மீதமிருந்த ஒரு ஓவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கவில்லை.

இது குறித்துத் தனது யூடியூப் தளத்தில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "வருண் சக்கரவர்த்தியை ஏன் முழுமையாகப் பந்துவீச அனுமதிக்கவில்லை? லீக் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் தனது முழுமையான 4 ஓவர்களையும் வீசினார். அப்போது இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதால் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஒரு பேட்டர் களத்தில் 50 அல்லது 60 ரன்கள் எடுத்த பிறகு, சிறப்பாக விளையாடினாலும் மைதானத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று நீங்கள் சொல்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா? அவர்கள் எத்தனை பந்துகள் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக 24 பந்துகள் மட்டுமே வீச வாய்ப்பு உள்ளது. அந்த 24 பந்துகளையும் நீங்கள் அவரை வீச விடவில்லை.
அவரை முழுமையாகப் பந்துவீச அனுமதித்திருந்தால் அவர் கட்டாயம் ஐந்து விக்கெட்டுகளைக் கூட வீழ்த்தியிருப்பார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நீங்கள் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. பேட்டர்களுக்கு எப்படி களத்தில் நிலைத்து நிற்க நேரம் தேவையோ, அதே போல பந்துவீச்சாளர்களுக்கும் தங்களது லயத்தைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து பந்துவீசுவது அவசியம்" என்று காட்டமாகக் கூறினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணியை 20 ஓவர்களில் 176 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.
இதில் வருண் சக்கரவர்த்தியின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. அவர் மேக்ஸ் ஓ டவுட், கொலின் அக்கர்மேன் மற்றும் ஆர்யன் தத் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஆர்யன் தத்தை அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்தப் போட்டியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்திய அணியின் உடற்தகுதி பயிற்சியாளரான அட்ரியன் லீ ரூக்ஸ், வருண் சக்கரவர்த்திக்கு டிரஸ்ஸிங் ரூமில் வைத்துச் சிறப்புப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார். இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வருண் சக்கரவர்த்தி, "உண்மையான உலகக்கோப்பை தொடர் இனி வரும் அடுத்த போட்டியில் இருந்துதான் தொடங்குகிறது. அதற்காக நாங்கள் முழுமையாகத் தயாராக வேண்டும்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.
லீக் சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, வெற்றி உத்வேகத்துடன் சூப்பர் 8 சுற்றில் களமிறங்குகிறது. மறுபுறம், ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் நெதர்லாந்து அணி தொடரை விட்டு வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராகப் போராடித் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.