சென்னை : பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு தேன் நிலவு சென்ற இடத்தில் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடினார். இதில் இறுதிப் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து, அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு ஆல் ரவுண்டராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கின்றார்.இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு வெங்கடேஷ் ஐயருக்கு கடந்த ஜூன் மூன்றாம் தேதி சுருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இதனை அடுத்து வெங்கடேஷ் ஐயர் தனது தேன் நிலவை இங்கிலாந்தில் கொண்டாடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது வெங்கடேஷ் ஐயர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து கொண்ட கவுண்டி அணி ஒன்று, தங்களுக்காக ஒரு மாதம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியுமா என்று கேட்டிருக்கிறது.
இதனை அடுத்து வந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக வெங்கடேஷ் ஐயர் விசா ஏற்பாடுக்காக இந்தியா சென்று இங்கிலாந்தில் விளையாடுவதற்கான (sports visa) விசாவை பெற்று இருக்கிறார். இதை அடுத்து மீண்டும் உடனடியாக இங்கிலாந்து வந்துள்ள வெங்கடேஷ் ஐயர் தற்போது அணிக்காக ஒரு நாள் தொடரில் லன்காசையர் அணிக்காக விளையாடுகிறார். முதல் இரண்டு போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் பெரிய ஸ்கோர் எதையும் அடிக்கவில்லை.
15 மற்றும் நான்கு ரன்கள் தான் அவர் அடித்திருந்தார். இனிவரும் போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் தமக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்கக் கூடாது என என கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்து கவுண்டி ஒருநாள் தொடரில் வெங்கடேஷ் ஐயர் விளையாடுவதன் மூலம் அவருடைய கிரிக்கெட் திறனும் அதிகரிக்கும், அனுபவமும் கிடைக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தேன்நிலவு சென்ற இடத்தில் தமக்கு வந்த கிரிக்கெட் வாய்ப்பை வீணடிக்காமல் வெங்கடேஷ் ஐயர் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.