புனே: அபுதாபியில் ஐபிஎல் 2026 ஏலம் இன்று நடைபெறும் நிலையில், சையது முஸ்டாக் அலி கோப்பையில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ₹23.75 கோடிக்கு வாங்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட இந்த ஆல்-ரவுண்டர், ஏலம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் தனது திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று புனேயில் பஞ்சாப் அணிக்கு எதிராக மத்திய பிரதேச அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஐயர், 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். எட்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். அவரது இந்த அதிரடி ஆட்டம், மத்திய பிரதேச அணி 225/8 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர்களுக்காக அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், ஐயரின் இந்த அரைசதம், முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கலாம். ஐயரின் ஐபிஎல் பயணம் 2021 சீசனின் ஐக்கிய அரபு எமிரேட்டில் தொடங்கியது. அப்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார்.
மேலும், இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத்தந்ததுடன், நாட்டின் மிக நம்பிக்கைக்குரிய பேட்டிங் ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அவரது நற்பெயரையும் நிலைநாட்டியது. 2023 சீசனில், அவர் ஒரு சதத்துடன் 400 ரன்களுக்கு மேல் குவித்து, தனது ஐபிஎல் வாழ்க்கையின் உச்சத்தை எட்டினார்.இருப்பினும், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ₹23.75 கோடி என்ற விலைக்கு சென்ற பிறகு, அவர் மீதான எதிர்பார்ப்புகள் வெகுவாக உயர்ந்தன.
இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் திணறினார். 11 போட்டிகளில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்து, 139.22 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஒருகட்டதில் விடுவிக்க முடிவு செய்தது.தற்போது மீண்டும் தனது திறனை நிரூபிக்கத் தொடங்கியுள்ளதால், வெங்கடேஷ் ஐயர் ஒரு 10 கோடி ரூபாய் வரை விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.