மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனையில் எப்போதும் இல்லாத அளவுக்கு குளறுபடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
குறிப்பாக ரசிகர்கள் பலரும் இதுவரை டிக்கெட்டை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், பிளாக் டிக்கெட் விற்பனை ஆன்லைனிலேயே அமோகமாக நடந்து வருகிறது.

மீண்டும் பிசிசிஐ கூடுதல் டிக்கெட் விற்ற போதும் இதே நிலைதான். இந்த நிலையில், பொங்கி எழுந்துள்ள முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பிசிசிஐ மீது கடும் சொற்களை வீசி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை : 2023 உலககோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது எனக் கூறிய போது பல இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். எப்படியாவது உலகக்கோப்பை போட்டிகளை நேரில் பார்க்கலாம் என கனவில் இருந்தார்கள்.
பிசிசிஐ அட்டவணை சொதப்பல் : ஆனால், முதல் விஷயமே கோணலாக அமைந்தது. உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ மிக தாமதமாக வெளியிட்டது. அதிலும் விமர்சனம் எழுந்தது. பின் அட்டவணையை மாற்றி அமைத்தது.
ஆன்லைன் டிக்கெட் எங்கே? : இந்த சொதப்பல்கள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக டிக்கெட் விற்பனையை துவங்கியது பிசிசிஐ. இந்த முறை ஆன்லைனில் டிக்கெட் விற்பனை எனக் கூறியது. சினிமா டிக்கெட் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் புக் மை ஷோ (Bookmyshow) தளத்தில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்கள் விற்கப்படும் என அறிவித்தது.
ஏமாற்றம் : அவர்கள் அறிவித்த தேதி மற்றும் நேரத்தில் அந்த தளத்திற்கு சென்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல போட்டிகளுக்கான பல லட்சம் டிக்கெட்கள் சில நிமிடங்களில் காலியானது. பலருக்கும் டிக்கெட் காலி என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.
பிளாக் டிக்கெட் : ஆனால், அடுத்த நாளே உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்கள் மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனை தளங்களில் விற்கப்பட்டன. அவை அனைத்தும் பிளாக் டிக்கெட்கள் என்பதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் மற்றும் கோபம் அடைந்தனர்.
மீண்டும் டிக்கெட் : இந்த நிலையில் ரசிகர்கள்தான் முக்கியம் என அறிக்கை விட்டு மீண்டும் 4,௦௦,௦௦௦ டிக்கெட்கள் விற்கப்படும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. இந்த முறை புக் மை ஷோவை விடுத்து நேரடியாக ஐசிசி இணையதளத்தில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. ஆனால், இப்போதும் ரசிகர்களுக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை. சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்களும் காலியாகின.
வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் : இப்படி தொடர்ந்து பிசிசிஐ சொதப்பி வந்த நிலையில்தான் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். "எந்த சந்தேகமும், வாதமும் வேண்டாம். நாம் உலகக்கோப்பைக்கான முன்னோட்டத்தை சொதப்பி விட்டோம்" எனக் கூறி இருக்கிறார்.
விளாசல் : மேலும், "முதலில் அட்டவணையை வெளியிட காரணமே இல்லாமல் தாமதம் செய்தது, அது போதாது என அட்டவணையை மாற்றி 5 போட்டிகளுக்கான தேதியை மாற்றியது. அதுவும் போதாது என வெளிப்படைத்தன்மை அற்ற, முறையற்ற டிக்கெட் விற்கும் முறையால் பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு மட்டுமே நன்மை நடந்துள்ளது" என விளாசி இருக்கிறார் அவர்.