கும்ப்ளே இடத்தை நிரப்புவதா.. சான்ஸே இல்லை.. சொல்கிறார் ஷேவாக்
டெல்லி: பயிற்சியாளராக இந்தியாவுக்கு பெரும் வெற்றிகளை குவித்த அனில் கும்ப்ளேவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று வீரேந்திர ஷேவாக் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே கடந்த ஓராண்டில் இந்தியாவுக்கு வெற்றி மேல் வெற்றிகளை குவித்துள்ளார். எனினும் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், தொட்ட கணேஷ், லால்சந்த் ராஜ்புத் ஆகிய 5 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முன்னாள் வீரர்கள் கண்டனம்
விராத் கோஹ்லியின் இந்த அடவாடித்தனமான செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கும்ப்ளே விலகியதால் இலங்கை தொடருக்கு முன்பு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

சிறந்த கேப்டன்
பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே குறித்து அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஷேவாக் கூறுகையில், கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் நான் விளையாடியது இல்லை. அவர் கேப்டனாக இருந்த போது அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். அப்போது இந்தியா பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது.

இடத்தை நிரப்புவது கடினம்
பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இந்திய பயிற்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே தகவலை பரிமாறிக் கொள்வது எளிதாக இருக்கும். ஆங்கிலத்தை விட இந்தியில் பேசுவது எளிதாக இருக்கும் என்றார் அவர்.

பிசிசிஐ முடிவு
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய அழைக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இன்னும் தகுதியானவர்களை அடையாளம் காண முடியும் என்றும் கருதுகிறது. மேலும் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்கலாமா என்ற யோசனையிலும் பிசிசிஐ உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications