மும்பை: 2025-ம் ஆண்டின் கடைசி நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து கிடைத்துள்ளது. விஜய் ஹசாரே ட்ராபியில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சர்பராஸ் கான், சும்மா 'பீஸ்ட் மோடில்' ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கோவா பந்துவீச்சாளர்கள் அரண்டு போய்விட்டார்கள்.
ஜெய்ப்பூரில் டிசம்பர் 31 அன்று நடைபெற்ற எலைட் குரூப் சி போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ள கோவா அணியை, சர்பராஸ் கான் பந்தாடிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 4-வது வீரராக களமிறங்கினார் சர்பராஸ் கான். ஆரம்பம் முதலே அதிரடியைக் கையில் எடுத்த அவர், கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார்.
வெறும் 75 பந்துகளை மட்டுமே சந்தித்த சர்பராஸ் கான், 157 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் 9 பவுண்டரிகள் அடக்கம். ஆனால், அவர் அடித்த 14 இமாலய சிக்ஸர்கள் தான் மிரள வைத்தது. 209.33 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய ஆட்டம், டி20 கிரிக்கெட்டையே மிஞ்சும் வகையில் இருந்தது. வெறும் 56 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த அவர், 42-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 150 ரன்களைக் கடந்தார்.
சர்பராஸ் கானின் இந்த ருத்ரதாண்டவத்தால் மும்பை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. சர்பராஸ் கான் மட்டுமல்ல, அவருடைய தம்பி முஷீர் கானும் 66 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். சகோதரர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் வந்த விக்கெட் கீப்பர் ஹர்திக் தமோரே 28 பந்தில் 53 ரன் மற்றும் கேப்டன் ஷர்துல் தாக்கூர் 8 பந்தில் 27 ரன் குவித்து வானவேடிக்கை காட்டினர்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2026 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தது. "எதுக்கு இவரை எடுத்தீங்க?" என்று கேட்டவர்களுக்கு, தனது பேட் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் சர்பராஸ். ஏற்கனவே சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த அவர், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.
அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் லலித் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தும், கோவா அணியால் சர்பராஸ் கானின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தாண்டுக்கு முந்தைய நாள் சர்பராஸ் கான் நடத்திய இந்த வானவேடிக்கை, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சர்பராஸ் கானுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.