மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட் மூலம் தேர்வுக்குழுவுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய அவர் சதம் விளாசி, விராட் கோலி, பாபர் ஆசம் ஆகியோரின் சாதனைகளைத் தகர்த்தெறிந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்தும், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கழற்றிவிடப்பட்டார். இந்த ஏமாற்றத்திற்கு இடையே, கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மகாராஷ்டிர அணி தவித்தபோது, ருதுராஜ் அணியை மீட்டார்.

131 பந்துகளில் 134 ரன்களைக் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர், அணியை 249 ரன்களுக்கு கொண்டு சென்றார். இறுதியில் மகாராஷ்டிரா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஒரே இன்னிங்ஸ் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றையே ருதுராஜ் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்:
உள்ளூர் ஒருநாள் (List A) கிரிக்கெட்டில் அதிவேகமாக 20 சதங்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
உலகின் நம்பர் 1 சராசரி: குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ் விளையாடியவர்களில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜின் சராசரி 58.83 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனின் (57.86) நீண்ட காலச் சாதனையை அவர் முறியடித்தார்.
விஜய் ஹசாரவில் அதிக சதம்: இந்தத் தொடரில் அதிக சதங்கள் (15 சதங்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை வெறும் 59 இன்னிங்ஸ்களிலேயே எட்டினார்.
ருதுராஜ் நீக்கப்பட்டது குறித்துப் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், "மிடில் ஆர்டரில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் ருதுராஜ் வல்லவர். அவரை அணியில் தக்கவைத்திருக்க வேண்டும். மிடில் ஆர்டரில் அவர் ஒரு சிறந்த சொத்து" என்று அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
சிஎஸ்கே கேப்டனாகவும், உள்ளூர் போட்டிகளில் 'ரன் மெஷினாகவும்' ஜொலிக்கும் ருதுராஜின் இந்த விஸ்வரூப ஆட்டம், தேர்வுக்குழுவினருக்கு ஒரு அழுத்தமான செய்தியைச் சொல்லியுள்ளது.