ஜெய்ப்பூர்: காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லின் ஆட்டத்தைக் காண ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியை நேரில் காணப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடும் சுப்மன் கில், சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார். இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த மைதானம் சிறியது என்பதாலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதாலும், பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "கல்லூரி வளாகத்திற்குள் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனியார் பாதுகாவலர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் விராட் கோலி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) விளையாடிய இரண்டு போட்டிகளுமே இதுபோன்று ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில்தான் நடத்தப்பட்டன. அதே நடைமுறை தற்போது சுப்மன் கில்லுக்கும் பின்பற்றப்படுகிறது.
முன்னதாக ரோஹித் சர்மா விளையாடிய போட்டியின் போது, ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் கடைசி நேரத்தில் மைதானம் மாற்றப்பட்டு, பெரிய மைதானமான சவாய் மான்சிங் மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது. ஆனால், கில்லின் போட்டிக்கு அத்தகைய மாற்றம் செய்யப்படவில்லை.
சுப்மன் கில்லைப் பொறுத்தவரை இந்தப் போட்டி மிக முக்கியமானது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கத் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த கில், தற்போது முழு உடற்தகுதியுடன் திரும்பியுள்ளார். எனவே, இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடித் தனது ஃபார்ம் மற்றும் உடற்தகுதியைத் தேர்வுக்குழுவினருக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் போட்டிகளைப் போலவே, சுப்மன் கில் விளையாடும் இந்தப் போட்டியும் தொலைக்காட்சியிலோ அல்லது ஆன்லைனிலோ நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் அணியில் கில்லுடன் இணைந்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் விளையாடுகிறார். வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இவர்கள் ஜெய்ப்பூர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.