மும்பை: 2024 விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் போட்டித் தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 ஃபோர், 11 சிக்ஸ் அடித்து மிரள வைத்து இருக்கிறார். 205 ரன்கள் சேஸிங் செய்தபோது அவர் மட்டுமே அதில் 148 ரன்கள் அடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த சர்வீசஸ் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. சர்வீசஸ் அணியின் கேப்டன் மோஹித் அஹ்லாவத் 64 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

இதை அடுத்து 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மகாராஷ்டிரா அணி விளையாடியது. அப்போது துவக்க வீரராக இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி மழை பொழிந்து மிரட்டினார். அவருடன் துவக்க வீரராக இறங்கிய ஓம் போசாலே 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த சித்தேஷ் வீர் நிதானமாக ஆடினார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ரன் சேர்த்து, ஒருநாள் போட்டியை டி20 போட்டியாக மாற்றினார். 20.2 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது மகாராஷ்டிரா அணி. ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 74 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் 16 ஃபோர் மற்றும் 11 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 என்பதாக இருந்தது.
கிட்டத்தட்ட அணியின் ஸ்கோரில் 72 சதவீதத்தை ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.