டெல்லி: பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கிய உச்சநீதிமன்ற நடவடிக்கை கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று, சுப்ரீம்கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான, ஆர்.எம்.லோதா கமிட்டி வழங்கிய சீர்திருத்த பரிந்துரையை அமல்படுத்தாமல், பொய் காரணங்களை கூறி ஏமாற்றி வந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாக்கூரை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து ஆர்.எம்.லோதா அளித்த பேட்டி: இந்த நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வேண்டியதுதான், இப்போது நடந்துள்ளது. எனது தலைமையிலான கமிட்டி, 3 அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்படியும், பிசிசிஐ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
லோதா கமிட்டி அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஏற்றது. உடனடியாக பிசிசிஐ அந்த அறிக்கையை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாதது பிசிசிஐக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை அனைவரும் ஏற்று நடந்தேயாக வேண்டும். சட்டத்தின் மாட்சிமை தனது பணியை செய்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்த தீர்ப்பு ஒரு பெரும் வெற்றி. நிர்வாகிகள், வருவார்கள்-போவார்கள். ஆனால் விளையாட்டுத் துறைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல விளையாட்டு துறை முன்னாள் பிரபலங்கள் பலரும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.