பெங்களூர்: விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் விதர்பா அணி கர்நாடகாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. நீண்டகாலமாக கர்நாடகாவுடனான அவர்களது தொடர் தோல்வி அடைந்து வந்த நிலையில் தற்போது விதர்பா அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சாம்பியன் கர்நாடகா நிர்ணயித்த 280 ரன்கள் என்ற இலக்கை துரத்திய விதர்பா, 284 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மோக்டே 122 பந்துகளில் 138 ரன்களும், ஆர். சமர்த் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் குவித்து, இலக்கை வெற்றிகரமாக துரத்தினர். முன்னதாக, கருண் நாயர் மற்றும் கே.எல். ஸ்ரீஜித் கர்நாடகாவுக்காக அரை சதங்கள் அடித்தனர்.

கர்நாடகாவின் பேட்டிங்கை முடிவில் கட்டுப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் தர்ஷன் நல்கண்டே 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் விதர்பா, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி வெற்றியாளரை எதிர்கொள்ளும்.
இந்தியாவின் முதன்மையான 50 ஓவர் உள்நாட்டுப் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில், விதர்பா அணி இதற்கு முன் கர்நாடகாவை ஒருபோதும் வென்றதில்லை. 281 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது, துவக்க ஆட்டக்காரர் அதர்வா டைடேவை சீக்கிரமாக இழந்தபோதும், மோக்டே, போராடி, 101 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்தார்.
மோக்டே இரண்டு முக்கிய பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக ஆடிய துருவ் ஷோரியுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தார். பின்னர், தனது முன்னாள் அணி வீரர்களுக்கு எதிராக அபாரமாக ஆடிய ஆர். சமர்த்துடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன்களும் சேர்த்து வலுவான அடித்தளமிட்டார்.
கர்நாடகா பந்துவீச்சில் 20வது ஓவருக்குப் பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் வைசாக் விஜய் குமார், யாஷ் தாக்கூர் வீசிய பந்து ஹெல்மெட்டில் பந்து பட்டதால் களத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக மன்வந்த் குமார் மாற்று வீரராக களமிறங்கினார். இதனால் நடு ஓவர்களில் கர்நாடகாவின் பந்துவீச்சு பாதிக்கப்பட்டது.
முன்னதாக, முதலில் பேட் செய்த கர்நாடகாவின் ஆட்டம் ஏற்ற இறக்கமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இழந்தனர். அதன்பிறகு, கருண் நாயரும், துருவ் பிரபாகரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு நிலைநிறுத்தினர். பிரபாகர் நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும், நல்கண்டேவின் பந்தை அவசரமாகப் புல் ஷாட் அடிக்க முயன்று, ஸ்கொயர் லெக்கில் இருந்த ஷோரியிடம் கேட்ச் ஆனார்.
பின்னர், கருண் மற்றும் கே.எல். ஸ்ரீஜித் நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கருண் தனது timing-க்காக போராடியபோதும், சிறப்பாக ஆடிய ஸ்ரீஜித்துக்கு ஒத்துழைப்பு நல்கினார். 31வது ஓவரில் 15 ரன்களும், 33வது ஓவரில் 11 ரன்களும் என மூன்று ஓவர்களில் மொத்தம் 31 ரன்கள் சேர்த்தனர். எனினும், நல்கண்டே கருணை அவுட்டாக்கியதும், ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீஜித் வெளியேறியதும், கர்நாடகாவை 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ள, விதர்பா மீண்டும் பந்துவீச்சில் கட்டுப்பாட்டைப் பெற்றது.
ஸ்ரேயாஸ் கோபால் 36 ரன்கள் மற்றும் அபினவ் மனோகர் 26 ரன்கள் ஆறாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்து கர்நாடகாவிற்கு ஒரு சிறிய ஊக்கத்தை அளித்தனர். ஆனால், இறுதி ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால், மேலதிக ரன்களைக் குவிக்கவும், ஆட்டத்தின் வேகத்தை தக்கவைக்கவும் முடியாமல் போனது.