இந்தூர்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு படை அமைத்ததெல்லாம் ஒன்னுமே இல்ல பாஸ். இந்திய கிரிக்கெட் வீரர்களின் வெற்றியைக் கொண்டாட மிகப் பெரிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா?
1970களை, இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றே சொல்லலாம். இங்கிலாந்து, வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகியவை கிரிக்கெட்டில் பின்னி பெடலெடித்து கொண்டிருந்த காலம் அது. அப்போது இந்திய அணி, மிகவும் சின்ன பசங்க அணிதான்.

1971, 1972ல் அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வென்றது. அதை கவரவிக்கும் வகையில், இந்தூரில் மிகப் பெரிய கிரி்க்கெட் பேட் நினைவுச் சின்னம், கிரிக்கெட் ரசிகர்களால், 2009ல் உருவாக்கப்பட்டது. அதை அஜீத் வடேகர் திறந்து வைத்தார்.
இந்தூரில் உள்ள பழைய நேரு விளையாட்டு மைதானத்துக்கு அருகே உள்ள பூங்காவில் இந்த நினைவுச் சின்னம் உள்ளது. விஜய் பல்லா' என்று அழைக்கப்படும் இந்த வெற்றி பேட் அமைக்கும் அளவுக்கு இந்தியா அப்படி என்ன செய்தது என்று கேட்கலாம். பிஷன் சிங் பேடி, பி.சந்திரசேகர், அஜித் வடேகர், சுனில் கவாஸ்கர் இந்த பெயர்களை கேட்ட உடனேயே, அவர்களுடைய சாதனைகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். இதுபோன்ற ஜாம்பவான்கள் அடங்கியது அப்போதைய இந்திய அணி.
1971ல் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் சென்றது. கிளைவ் லாயிட், சோபர்ஸ், ராய் பெடரிக்ஸ் போன்றோர் இருந்த வெஸ்ட் இன்டீஸ் அணிதான் அப்போதைக்கு உலகின் டெரர் அணி. முதல் போட்டியை டிரா செய்த இந்தியா, இரண்டாவது போட்டியில் வென்றது. கடைசியில், 5 டெஸ்ட் போட்டியை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. சுனில் கவாஸ்கர், அந்த தொடரில், 774 ரன்கள் எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்று கூறப்படும் அந்த, 1971ல், அடுத்ததாக இங்கிலாந்துக்கு சென்றது இந்தியா. அதற்கு முன் விளையாடிய, 19 டெஸ்ட்களில், 15ல் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ஆஹா, மீண்டும் தோற்பதற்கு நமக்கு ஒரு அடிமை கிடைச்சாச்சு என்று இங்கிலாந்து கொக்கரித்தது.
முதல் இரண்டு டெஸ்ட்களை இந்தியா டிரா செய்தது. மூன்றாவது போட்டியில், சந்திரசேகர் 38 ரன்களுக்கு 6 விக்கெட்கள் எடுக்க, அந்த போட்டியுடன், தொடரையும் இந்தியா வென்றது. அதுதான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் தொடர் வெற்றியாகும். இந்த, 1971 பொற்கால அணியின் நினைவாக, வெற்றி பேட் அமைத்தது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் என்பது தற்போது புரிந்திருக்கும். தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரத்துக்கு அஸ்திவாரம் போட்டது, 1971ல் தான்.