மும்பை: கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகக் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை செய்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது மேலும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார். 13 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி 2024 - 25 விஜய் ஹசாரே டிராபி தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.
பீகார் அணியில் இடம் பெற்று இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று தனது அறிமுகத்தை பெற்றார். இதன் மூலம், தனது முதல் லிஸ்ட் ஏ போட்டியில் ஆடினார் வைபவ் சூர்யவன்ஷி. இதன் மூலம் லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைந்த வயது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.

அவருக்கு 13 வயது 269 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில், இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதற்கு முன்பு அலி அக்பர் மிகக் குறைந்த வயதில் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடிய இந்திய வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார். அவர் 14 வயது 51 நாட்களில் 1999 - 2000வது சீசனில் லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடி இருந்தார்.
அந்த சாதனையை 24 ஆண்டுகளுக்கு பின்னர் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்து இருக்கிறார். மிகக் குறைந்த வயதில் ரஞ்சி டிராபி, லிஸ்ட் ஏ அணி மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளில் ஆடிய இந்திய வீரர் ஆகிய சாதனைகளை செய்து இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி இருந்தது. அவரது விலை 1.10 கோடி ரூபாயாக இருந்தது. 13 வயது வீரரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வேறு சில அணிகளும் போட்டி போட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
இடது கை பேட்ஸ்மேன் ஆன வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ போட்டியில் அறிமுகமான நிலையில், தனது முதல் போட்டியில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணி 46.4 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. 197 ரன்கள் என்ற இலக்கை மத்திய பிரதேச அணி 25.1 ஓவரிலேயே எட்டி வென்றது.