மும்பை: விஜய் ஹசாரே டிராபி தொடரில் ரன் திருவிழா நடந்த நிலையில், இன்று உத்தரகாண்டிற்கு எதிரான போட்டியில் ஒரு சோகமாக சம்பவம் நிகழ்ந்தது. மும்பை வீரரும், KKR நட்சத்திரமுமான 21 வயது அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு ஃபீல்டிங்கின்போது தலையில் காயம் ஏற்பட்டது. அவர் அவசரமாக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மும்பை வீரர் தனுஷ் கோட்டியான் வீசிய 30வது ஓவரில் சௌரப் ராவத் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் பகுதியில் ஓடிப்பிடிக்க முயன்றபோது, அங்கிரிஷ் ரகுவன்ஷி தடுமாறி விழுந்தார். இதில் தலையிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு அவருக்கு கன்கஷன் ஏற்பட்டது.

காயமடைந்த ரகுவன்ஷி எழுந்து நிற்க முடியாமல் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து மும்பை பிசியோ விரைந்தார். மற்ற வீரர்களும் ரகுவன்ஷியிடம் அருகில் வந்து அவரை பரிசோதித்தனர். உடனடியாக ஸ்ட்ரெச்சர் மூலம் அவர் SDMH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். இதனையடுத்து ரகுவன்ஷிக்கு ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவருக்கு பயப்படும் வகையில் ஏதும் இல்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போட்டியில் மும்பை 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது. அங்கிரிஷ் ரகுவன்ஷி 20 பந்துகளில் 11 ரன்களும், ஹர்திக் தமோரே 82 பந்துகளில் 93* ரன்களும், முஷீர் கான் 56 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.
சர்பராஸ் கான் (49 பந்துகளில் 55), கேப்டன் ஷர்துல் தாக்கூர் (29), ஷம்ஸ் முலானி (48) எடுத்தனர். முதல் ஆட்டத்தில் 155 ரன்கள் அடித்த ரோஹித் ஷர்மா இப்போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். உத்தராகண்ட் சார்பில் தேவேந்திர போரா 74 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.விஜய் ஹசாரே டிராபியின் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி சிக்கிமை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.