அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி தொடரின் முதல் நாளில், இந்திய வீரர் இஷான் கிசன் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட சில நாட்களில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர்களின் பட்டியலில், முதல் நான்கு இடங்களில் மூன்று சதங்கள் ஒரே நாளில் அடிக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ராஞ்சியில் நடைபெற்ற பிளேட் லீக் போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக, பீகார் அணி 574 ரன்கள் குவித்த போது, சகீபுல் கனி இந்திய வீரர்களில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் அதிவேக சதம் அடித்து முதலிடம் பிடித்தார். அதிரடியாக விளாசிய அவர் தனது சதத்தை வெறும் 32 பந்துகளில் எட்டியிருந்தார்.

கனியின் இந்த சாதனையைப் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, இஷான் கிஷன் அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்தார். அகமதாபாத்தில் கர்நாடக அணிக்கு எதிரான ஜார்கண்டின் விஜய் ஹசாரே டிராபி தொடக்கப் போட்டியில், கிஷன் 33 பந்துகளில் அதிரடியான சதம் அடித்து இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
இந்த சாதனைகள் ஒருபுறம் இருக்க, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சகீபுல் கனியை விட வேகமான சதங்கள் அடித்தவர்கள் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வைபவ் சூர்யவன்ஷியும் 84 பந்துகளில் 190 ரன்கள் விளாசி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அன்றைய தினத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
கர்நாடக அணியால் முதலில் பேட் செய்யப் பணிக்கப்பட்ட ஜார்கண்ட், 412 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. இதில் முக்கியப் பங்காற்றிய இஷான் கிஷன், ஆறாவது வீரராகக் களமிறங்கி 39 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். இவரின் அதிரடி ஆட்டத்தில் ஏழு பவுண்டரிகளும் பதினான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
குமார் குசாக்ராவின் விக்கெட் 38வது ஓவரில் விழுந்தவுடன் களமிறங்கிய கிஷன், வெறும் 20 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். பின்னர் எஞ்சிய 13 பந்துகளுக்குள் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து தனது சதத்தை அதிவேகமாக நிறைவு செய்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஜார்கண்ட் அணி சையத் முஷ்டாக் அலி டிராபியை வெல்ல இஷான் கிஷன் முக்கியப் பங்காற்றினார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மொத்தம் 517 ரன்கள் குவித்த இஷான் கிஷன், 33 சிக்ஸர்கள் அடித்து தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும், இறுதிப் போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசி, ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். டி20 போட்டிகளை தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஃபினிஷராக இசான் கிஷன் தன்னை நிலை நிறுத்திகொண்டுள்ளார். இசான் கிஷன், டி20 உலககோப்பையிலும் பிளேயிங் லெவனில் நடுவரிசையில் களமிறங்க தற்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.