மும்பை: விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பஞ்சாப் அணியில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் சுப்மன் கில், உலக நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, இந்தியாவின் முன்னணி டி20 பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 22 அன்று அறிவிக்கப்பட்ட இந்த அணி, 2025 டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 18 வரை நடக்கும் முதன்மை உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
கில், அர்ஷ்தீப், அபிஷேக் தவிர பிரப்சிம்ரன் சிங், அன்மோல்பிரீத் சிங், நமன் தீர், ரமன்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், சலீல் அரோரா போன்ற வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளனர். ஆனால், கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை . பஞ்சாப் அணி ஜெய்ப்பூரில் சத்தீஸ்கர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, மும்பை அணிகளுடன் குரூப் ஆட்டங்களில் மோதுகிறது.

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்காத சுப்மன் கில், ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஆடலாம். இதனால் அர்ஷ்தீப்புடன் இணைந்து கில், விஜய் ஹசாரே தொடரின் சில ஆட்டங்களைத் தவறவிட வாய்ப்புள்ளது.
இதேபோல், இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் உள்ள அபிஷேக் ஷர்மா, பஞ்சாப் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினால், முக்கிய ஆட்டங்களில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்படலாம்.பஞ்சாப் அணி டிசம்பர் 24 அன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிராவுக்கு எதிராக தனது டிராபி பயணத்தைத் தொடங்குகிறது. மகாராஷ்டிரா அணியில் பிரித்வி ஷா, அர்ஷின் குல்கர்னி போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப்பின் அடுத்த லீக் ஆட்டங்கள்: டிசம்பர் 26 சத்தீஸ்கர், டிசம்பர் 29 உத்தரகாண்ட், டிசம்பர் 31 இமாச்சலப் பிரதேசம், ஜனவரி 3 சிக்கிம், ஜனவரி 6 கோவா, ஜனவரி 8 மும்பை அணிகளுடன் நடைபெறுகின்றன.இந்தத் தொடரில் மும்பை கிரிக்கெட் சங்கம், நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவை அணியில் சேர்த்துள்ளது.
38 வயதான ரோகித், ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மும்பைக்காக சில ஆட்டங்களில் விளையாடுவார்.டெல்லி அணியில் விராட் கோலி உள்ளார். ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணிக்காக அவரும் களமிறங்குவார். கர்நாடகாவுக்காக கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடுகின்றனர்.