பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில், குஜராத்தின் விஷால் ஜெய்ஸ்வால், டெல்லி அணியின் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.நடப்பு தொடரில் ஏற்கெனவே சதம் விளாசி அபார ஃபார்மில் இருந்த கோலி, குஜராத்துக்கு எதிராக 61 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்
எனினும், 22வது ஓவரில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் விஷால் ஜெய்ஸ்வால், கீப்பர் உர்வில் படேல் மூலம் கோலியை ஸ்டம்ப் அவுட் செய்தார். இதன் மூலம் கோலி தொடர்ந்து 2வது சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெய்ஸ்வால் கோலியுடன் நிற்கவில்லை. டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் அரை சதம் அடித்திருந்தபோது, 44வது ஓவரில் அவரையும் வீழ்த்தினார். அர்பித் ரானா 10 மற்றும் நிதிஷ் ரானா 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என தனது சிறந்த பந்துவீச்சு சாதனையைப் பதிவு செய்தார்.
குஜராத்தின் முதல் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் ஒரு விக்கெட் வீழ்த்தி, சர்வீசஸ் அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வெற்றிக்கு உதவினார். 27 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், குஜராத் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுகிறார். இதுவரை 11 முதல் தரப் போட்டிகள், 12 லிஸ்ட் ஏ ஆட்டங்கள், 16 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அக்டோபர் 2022 இல் அறிமுகமான ஜெய்ஸ்வால், அந்தப் போட்டியில் பந்துவீசவில்லை. ஒன்பதாவது வீரராக ரன்னின்றி ஆட்டமிழந்தார். மொத்த கரீயரில் 64 விக்கெட்டுகளை (40 முதல் தரப் போட்டிகளில்) கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் திறமையான வீரராக விளங்குகிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் ஒரு சதம், ஒரு அரை சதம், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஒரு அரை சதத்தையும் அடித்துள்ளார். ஆனால், இதுவரை விசால் எந்த ஒரு ஐபிஎல் அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது கோலி விக்கெட்டை எடுத்துவிட்டதால், அவரது ரசிகர்களுக்கு வில்லனாக மாறிவிட்டார்.