மும்பை : விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்தத் தொடரில் இடம்பெற வேண்டும் என பல்வேறு வீரர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். தற்போது இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்து அபாரமாக விளையாடி வருகிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தமக்கு இடம் கிடைக்க வருண் சக்கரவர்த்தி போராடி வருகிறார்.

இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குல்திப் யாதவ் இடம்பெறுவது சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அவர் முழு உடல் தகுதியை எட்டி விட்டாரா என்ற தகவல் இல்லை. இதனால் வருண் சக்கரவர்த்தி எப்படியாவது 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துவிட முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராஜஸ்தான் அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். குறிப்பாக அபஜித் தோமர் 111 ரன்கள் குவித்தார். இதேபோன்று கேப்டன் மஹிபால் லோம்ரர் 60 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது வருண் சக்கரவர்த்தி தன்னுடைய மேஜிக் பந்து வீசினார். இதில் கொத்தாக விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. இதில் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்ட தீபக் ஹூடா 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். 30 ஓவரில் எல்லாம் 180 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி, வருண் சக்கரவர்த்தியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 47.3 ஓவரில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி ஒன்பது ஓவரில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் தனது பங்கிற்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு சிஎஸ்கே வீரரான விஜய் சங்கர் ஏழு ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை..