ராஜ்கோட் : இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்த தீபக் ஹூடா உள்ளூர் ஒருநாள் போட்டியில் 19 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து தூணாக நின்று தன் அணிக்கு போட்டியை வென்று கொடுத்தார்.
பிசிசிஐ நடத்தும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா - ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் தான் தீபக் ஹூடா இந்த அதிரடியை நிகழ்த்தி இருந்தார்.
இதன் மூலம் விஜய் ஹசாரே தொடரின் வரலாற்றில் சிறந்த நாக் அவுட் ஆட்டத்தை அவர் ஆடி இருக்கிறார். இதற்கு முன் விஜய் ஹசாரே தொடரின் நாக் அவுட் சுற்றில் இத்தகைய அதிரடி சதம் அடிக்கப்பட்டதில்லை. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட தீபக் ஹூடா 180 ரன்கள் குவித்து தன் அணியை இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கும் அழைத்து சென்று இருக்கிறார்.

முன்னதாக கர்நாடகா - ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது கர்நாடகா.
அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக துவக்க வீரர்கள் அபிஜித் மற்றும் ராம் சவுஹான் டக் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மகிபால் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது அந்த அணி. அப்போது நான்காம் வரிசையில் இறங்கிய கேப்டன் தீபக் ஹூடா, கரன் லம்பாவுடன் இணைந்தார்.
லம்பா ஒருபுறம் நிதான ஆட்டம் ஆட, தீபக் ஹூடா அதிரடியில் உச்சகட்ட ஆட்டம் ஆடினார். 19 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்ட அவர் 128 பந்துகளில் 180 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் கர்நாடகா அணி திணறியது. ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 44வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின் லம்பா அதே ஓவரில் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தீபக் ஹூடாவுக்கு சமீப காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆட உள்ளார். 2024 ஐபிஎல் தொடருக்கு முன் சிறப்பான அதிரடி ஆட்டம் ஒன்றை ஆடிக் காட்டி தன் ஃபார்மை நிரூபித்து இருக்கிறார்.