பெங்களூர் : விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதி சுற்றுக்கு கர்நாடகா அணி தகுதி பெற்று இருக்கிறது. இதில் அந்த அணியின் 24 வயதான நட்சத்திர வீரர் டேவுதட் படிக்கல், உலக அளவில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா அணி பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடகா அணி முதல் ஓவரிலே தங்களுடைய கேப்டன் மாயங் அகர்வாலை இழந்தது.

இந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த 24 வயது வீரரான முன்னாள் ஆர் சி பி வீரர் தேவுதட் படிக்கல், ரவிச்சந்திரன் சமரன் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. இதில் அபாரமாக விளையாடிய படிக்கல் 113 பந்துகளை எதிர் கொண்டு 86 ரன்கள் சேர்த்தார். இதில் 8 பவுண்டர்களும் ஒரு சிக்சரும் அடங்கும்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற சாதனையை படிக்கல் படைத்திருக்கிறார். 2000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் படிக்கல்தான் தற்போது அதிக சராசரி வைத்திருக்கிறார். 31 போட்டியில் விளையாடியுள்ள படிக்கல் சராசரியாக 82.52 அளவில் வைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு இந்திய அணியின் ருதுராஜ் 58 என்ற சராசரியும்,ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பேவன் 57 என்ற சராசரியும், இங்கிலாந்து வீரர் சாம் ஹேண் என்ற வீரர் 57 என்ற சராசரியும், விராட் கோலி 57 என்ற சராசரி வைத்திருந்தார்கள். படிக்கல் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.
சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு தாயகம் திரும்பி அவர் கால் இறுதியில் 99 பந்துகளில் 102 ரன்கள் விளாசி பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். டேவுதட் படிக்கல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் நிலையில், அவருக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் தர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.