ராஜ்கோட்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது அதிரடி பேட்டிங் மூலம் மைதானத்தை அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 31 பந்துகளில் 75 ரன்களைக் குவித்து, நியூசிலாந்து தொடருக்கும், டி20 உலகக்கோப்பைக்கும் தான் தயாராகிவிட்டதை அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில், பரோடா மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டி இன்று (ஜனவரி 8, 2026) நடைபெற்றது. பரோடா அணிக்காக 6-வது வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் சண்டிகர் பந்துவீச்சாளர்களைப் பந்தாடத் தொடங்கினார்.

வழக்கத்தை விட அதிவேகமாக ஆடிய ஹர்திக், வெறும் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 31 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். 9 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 241.94 என்பதாக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு பிரியன்ஷு மோலியாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக், 51 பந்துகளில் 90 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இவருக்குப் பின் வந்த ஜிதேஷ் சர்மாவும் 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ஹர்திக் பாண்டியா இந்தத் தொடரில் ஏற்கனவே விதர்பா அணிக்கு எதிராக 11 சிக்ஸர்கள் அடித்து, 133 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் முழுமையாக 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு இன்னும் பந்துவீச்சு உடற்தகுதி பெறாததால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறவில்லை. இருப்பினும், ஜனவரி 21-ம் தேதி தொடங்கவுள்ள டி20 தொடரில் அவர் விளையாடவுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்பாக ஹர்திக் காட்டி வரும் இந்த அதிரடி எதிரணிகளுக்குப் பீதியைக் கிளப்பியுள்ளது.