ஜெய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள இசான் கிஷன் தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் அதிரடியாக 78 பந்துகளில் 134 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை என காரணம் காட்டி இசான் கிஷனை, பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இதனால் இஷான் கிஷன் இந்திய அளவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். எனினும் இசான் கிஷன் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கான வாய்ப்பில் தாமும் இருக்கிறேன் என்பதை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் சாம்பியன் கோப்பை தொடர் என அடுத்தடுத்து மிகப்பெரிய தொடர்கள் இருக்கிறது. இந்த தொடரில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீரர்களும் தீவிரமாக உழைத்து வருகின்றனர். இதனால் தற்போது நடைபெறும் விஜய் அசாரே தொடரில் சிறப்பாக விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி இன்று பலப்பரீட்சை நடத்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மணிபூர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இஷான் கிஷன் மணிப்பூர் பந்துவீச்சை சிதறடித்தார்.
64 பந்துகளில் இஷான் கிஷன் சதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 பந்துகளில் இசான் கிஷன் 134 ரன்கள் விளாசினார். இதில் 16 பௌண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இசான் கிஷன் உடன் ஜோடியாக விளையாடிய உட்கார்ஷ் சிங் 64 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெடுக்கு 196 ரன்கள் எடுத்தது. இசான் கிஷனின் அதிரடியால் ஜார்க்கண்ட் அணி 28.3 ஓவர்களில் எல்லாம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இசான் கிஷன் இடம் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.