மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்தான் கருண் நாயர். இந்திய அணியின் அடுத்த ஸ்டார் வீரராக உருவாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருண் நாயர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
எனினும் கருண் நாயர், தற்போது அணிக்கு திரும்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரில் கடந்த ஆறு இன்னிங்சில் ஐந்து சதங்களை கருண் நாயர் அடித்திருக்கிறார்.

இதில் அவர் ஒரு முறை தான் ஆட்டம் இழந்து உள்ளார். இது குறித்து தற்போது பேசி இருக்கும் கருண் நாயர், நான் கடந்த ஆண்டு ராபின் உத்தப்பாவிடம் பேசிய போது நகைச்சுவைக்காக ஒரு கருத்தை சொன்னேன். நான் விளையாடும் அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தால் மட்டும்தான் என்னை தேர்வு குழுவினர் கவனிப்பார்கள் என்று சொன்னேன்.
ஆனால் தற்போது அது உண்மையாகி இருக்கிறது. அந்த வார்த்தைகள் மூலம், எனக்கே தெரியாமல் நான் இப்படி செய்ய வேண்டும் என்று என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன் என நினைக்கின்றேன். 2023-24 ரஞ்சித் தொடரில் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நான் கிட்டத்தட்ட மொத்தமாக 700 ரன்கள் அடித்தேன். இதன் மூலம் விதர்பா அணி இறுதிப் போட்டிக்கு சென்றது.
ஆனால் என்னை துலீப் கோப்பை தொடருக்கு கூட தேர்வு குழுவினர் சேர்க்கவில்லை. அதை நினைத்து நான் மிகவும் காயப்பட்டேன். முதலில் ரஞ்சி கோப்பையில் விளையாடும் போது நான் வாய்ப்புகளை தவறவிட்டேனா? எடுத்த ரன்களை பெரிய இலக்காக மாற்றவில்லையோ என்று நினைத்து வருத்தப்பட்டேன். ஆனால் விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் போது நடந்ததை எல்லாம் மறந்து விட்டேன்.
களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். இதன் மூலம் எனக்கு அதிக அளவு சதங்கள் கிடைத்தது. தற்போது என்னுடைய செயல்பாடுகளை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால் நான் எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் குறித்து நினைக்காமல் தற்போது என்ன நடக்கிறது? அதை நாம் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்று மனநிலையில் உள்ளேன். என்னுடைய வாழ்நாளில் முக்கியமான இன்னிங்ஸை ஆடுகிறேன் என அனைத்து போட்டிகளையும் நினைக்க தொடங்கி விட்டேன்.
எனினும் என் வாழ்நாளில் ஏற்பட்ட கருப்பு தினங்களை நான் நினைக்கவில்லை என்று சொன்னால் அது பொய் தான். எனினும் அந்த எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய திறனை வளர்த்துக் கொண்டேன். கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற மன ஓட்டத்தில் இருக்கின்றேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் கடும் உழைப்பை போட்டு இருக்கிறேன். அது தற்போது கை கொடுத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு சார்பாக தேர்வு செய்யப்பட்டது நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். இது இருள் சூழ்ந்த என்னுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்திருக்கிறது. நான் என்னுடைய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மட்டும் தான் யோசித்து வருகிறேன். தவிர இந்திய அணியில் இடம் பெற எனக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று கருண் நாயர் கூறியுள்ளார்.