மும்பை : விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி பரோடா அணியை 124 ரன்களில் சுருட்டி அசத்தினார். பிசிசிஐ நடத்தும் பிரதான ஐம்பது ஓவர் போட்டியாக கருதப்படுவது விஜய் ஹசாரே கோப்பையாகும்.
இதில் குரூப் இ பிரிவில் இன்று தமிழக அணியும் பரோடா அணியும் மும்பையில் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் பரோடா வீரர்கள் சிறப்பாக பந்து வீசி தமிழக அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லுக்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழக அணியில் சாய் சுதர்சன் 15 ரன்களும், சாய் கிஷோர் 8 ரன்களும், நாராயன் ஜெகதீசன், பாபா அபிரஜித் டக் அவுட் ஆகியும், பாபா இந்திரஜித் ஐந்து ரன்களிலும் விஜய் சங்கர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தமிழக 52 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் நடு வரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். அவருக்கு ஷாருக்கான் 31 ரன்கள் சேர்த்து துணை நின்றார். இதன் மூலம் தமிழக அணி 33.3 ஓவர்கள் எல்லாம் 162 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பரோடா அணி களம் இறங்கியது. இந்த தருணத்தில் தான் தமிழக வீரர் நடராஜன் கையில் பந்து சென்றது. நடராஜன் தன்னுடைய ஆக்ரோஷமான பந்து வீச்சால் பரோடா வீரர்களை நிலை குலைய வைத்தார்.நடராஜன் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பரோடா வீரர்கள் தடுமாறினர்.
அந்த அணியின் முதல் மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேறினர். கேப்டன் விஷ்ணு சோளங்கி மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த பரோடா அணி 124 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்து வீசிய நடராஜன் ஏழு ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 உலககோப்பை இன்னும் 6 மாதத்தில் வர உள்ள நிலையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருவது, அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறிது.