லண்டன் : இந்தியாவில் வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா இந்திய அரசிடம் இருந்து தப்பித்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் நேற்று கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த செய்தி தெரிய வந்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. அதை காண நேற்று விஜய் மல்லையா வந்தார். கோட், சூட் எல்லாம் போட்டுக் கொண்டு கம்பீரமாக வந்தார்.

இந்தியாவில் தலைமறைவாக இருக்கிறார் என அரசு சொல்லி வரும் வேளையில், மிகவும் சுதந்திரமாக இங்கிலாந்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் மல்லையா கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்தார்.
மல்லையாவுக்கு கிரிக்கெட் மீது ஒரு ஆர்வம் உண்டு. ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கூட அவருடைய பங்குகள் அதிகம் என கூறப்பட்டது. இப்போது அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அந்த அணி எந்த பிரச்சனையும் இன்றி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்தியா - இங்கிலாந்து போட்டியை பார்த்துவிட்டு வெளியே வந்த மல்லையாவிடம் நீங்கள் எப்போது இந்தியா திரும்புவீர்கள் என கேட்டார் ஒரு செய்தியாளர். அதற்கு பதில் அளித்த மல்லையா, அதை நீதிபதி தான் முடிவு செய்யவேண்டும் என கூறி விட்டு சென்றுவிட்டார்.
இப்போது, நம்ம ஊர் அரசியல்வாதிகள், விஜய் மல்லையா தலைமறைவாக கிரிக்கெட் பார்த்தார் என சொன்னாலும் சொல்வார்கள்.