
யாரை தேர்வு செய்வது?
இந்திய அணி தற்போது தீவிரமாக உலகக்கோப்பை 2019 தொடருக்காக தயாராகி வருகிறது. அதற்கேற்ப இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. தற்போது பல வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஆட தயாராக இருக்கும் நிலையில், அவர்களில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது.

அதிக ஆல்-ரவுண்டர்கள்
இந்திய அணியில் தற்போது முன் எப்போதும் இல்லாத அளவு ஆல்-ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பண்டியா, ஜடேஜா, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் என ஒருநாள் அணியில் பல ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.

ஹர்திக் பண்டியா நிச்சயம்
இவர்களில் ஹர்திக் பண்டியாவுக்கு தான் அணியில் நிச்சய வாய்ப்பு இருக்கிறது. அவர் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. தற்போது ஹர்திக் பண்டியா போலவே மித வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் இடம் பிடித்துள்ளார் விஜய் ஷங்கர்.

விஜய் செயல்பாடுகள் எப்படி?
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பண்டியாவின் இடத்திற்கு தற்காலிகமாக சேர்க்கப்பட்ட விஜய் ஷங்கர், தேர்வாளர்களை ஈர்க்கும் வகையில் பெரிய செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. எனினும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பொறுப்பாக ஆடியது மட்டும் சிலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் ஷங்கரை தேர்வு செய்ய வேண்டும்
ஹர்திக் பண்டியா, விஜய் ஷங்கர் இருவரையும் அணியில் ஆட வைப்பது என்பது கடினமான காரியமாக இருக்கும். இந்நிலையில், கவாஸ்கர் உலகக்கோப்பை அணிக்கு விஜய் ஷங்கரையும் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சூழ்நிலை உணர்ந்து ஆடுகிறார்
அதற்கு காரணம், அவர் ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து பேட்டிங் செய்கிறார். மேலும், நல்ல பீல்டராகவும் இருக்கிறார் என தெரிவித்தார் கவாஸ்கர். இது போன்ற போட்டியின் சூழலை உணர்ந்து ஆடும் வீரர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மிகக் கடினம்
கவாஸ்கர் இப்படி கூறினாலும், விஜய் ஷங்கர் பேட்டிங்கில் இன்னும் அரைசதம், சதம் என அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல பந்து வீச கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் விக்கெட்கள் வீழ்த்தவில்லை. தற்போதுள்ள சூழலில், உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம் பெறுவது மிக மிகக் கடினமே.


Click it and Unblock the Notifications











