என்ன காரணம்?
இந்த வாய்ப்புக்கான காரணமாக விஜய் ஷங்கரின் சமீப கால ஆட்டம் இந்திய அணியில் பெரிய மாறுதலை உண்டாக்கி உள்ளது என தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.
உலகக்கோப்பைக்கு முன்
இந்திய அணி உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்து வரும் நிலையில், உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி தொடராக ஆஸ்திரேலிய தொடர் அமைந்துள்ளது. இந்த தொடருக்கான அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு உலகக்கோப்பை வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ரசிகர்கள் கேள்வி
தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், புதிய வீரராக, மிகக் குறைந்த போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள விஜய் ஷங்கருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி சில ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நியூசிலாந்து ஆட்டம்
தேர்வுக் குழுவை பொறுத்தவரை விஜய் ஷங்கர் நியூசிலாந்து தொடரில் பொறுப்பாக அணியின் சூழல் உணர்ந்து பேட்டிங் செய்தது மற்றும் ஆல்-ரவுண்டராக அவரது மித வேகப் பந்துவீச்சு ஆகியவை அணிக்கு உதவும் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது.
அணியில் மாறுதல்
தேர்வுக் குழு தலைவர் பிரசாத் கூறுகையில், "விஜய் ஷங்கரின் சமீப கால ஆட்டம் இந்திய அணியில் பெரிய மாறுதலை உண்டாக்கி உள்ளது. அடுத்து வரும் சில போட்டிகளில் அவரது செயல்பாடுகளை கவனிக்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.
களம் இறங்கும் வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விஜய் ஷங்கர் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம், ஒருநாள் தொடரில் கடைசி ஒரீரு போட்டிகளில் விஜய் ஷங்கர் வாய்ப்பு பெறுவது கூட சந்தேகம் தான். காரணம், இந்தியா முழு பலத்துடன் ஒருநாள் தொடரில் களமிறங்கும் என கூறப்படுகிறது.