சென்னை: இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாடு அணியின் முக்கிய ஆல்-ரவுண்டருமான விஜய் சங்கர், தனது சொந்த மாநில அணியிலிருந்து விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்திருப்பது, தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய போதிலும், தமிழ்நாடு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டு, அணியில் இடமின்றி வெளியே அமர வைக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியே இந்த முடிவுக்குக் காரணம் என்று விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார்.

2012-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் 34 வயதான விஜய் சங்கர், இந்த அதிரடி முடிவுக்கான காரணங்கள் குறித்து தி ஹிந்து' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
"சில நேரங்களில், நாம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம். நான் நன்றாக விளையாடி வருவதாகவே நினைக்கிறேன். அதைவிட முக்கியமாக, நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். பல ஆண்டுகள் விளையாடிய பிறகு, வெளியே உட்கார்ந்து வீரர்களுக்குத் தண்ணீர் தூக்கிக்கொண்டு இருப்பது மிகவும் கடினம்," என்று தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புச்சி பாபு கோப்பை தொடரில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் லெவன் அணியிலிருந்து கடைசி இரண்டு போட்டிகளில் அவர் நீக்கப்பட்டது, அவரது விரக்தியின் உச்சமாக அமைந்தது. "கடந்த ஆண்டு ரஞ்சி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டேன், பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பினேன். சையது முஷ்டாக் அலி தொடரிலும் கடைசி இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டேன். ஒரு கட்டத்தில், உங்களுக்கு ஒரு தெளிவு தேவைப்படுகிறது. அந்தத் தெளிவு எனக்குக் கிடைக்கவில்லை." என்றார்.
தமிழ்நாடு அணிக்காக 81 ரஞ்சி இன்னிங்ஸ்களில் 44.25 என்ற சராசரியுடன் 3,142 ரன்கள் குவித்துள்ள விஜய் சங்கர், தனது கேப்டன்சியின் கீழ் மூன்று உள்ளூர் கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். ஆனாலும், "தேர்வாளர்களிடமிருந்து எனக்கு ஒருபோதும் பாதுகாப்பான உணர்வு கிடைத்ததில்லை. தமிழ்நாடு அணியில் தொடர்ந்து என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலேயே இருந்தேன்." என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தனது பேட்டிங் வரிசை தொடர்ந்து மாற்றப்பட்டதும் தனது ஆட்டத்தைப் பாதித்ததாகக் கூறிய அவர், "2022-ல் மட்டும்தான் தொடர்ந்து 6-ம் வரிசையில் ஆடி, மூன்று சதங்களை அடித்தேன். ஆனால், அதன்பிறகு 3-ம் வரிசையில் இருந்து 7-ம் வரிசை வரை எல்லா இடங்களிலும் ஆட வைக்கப்பட்டேன்." என்றார்.
தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்கள் தன்னை ஒரு சிறந்த, வலிமையான கிரிக்கெட் வீரனாக மாற்றியுள்ளதாகக் கூறும் விஜய் சங்கர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்று இருக்கும் அவர், தனது புதிய அத்தியாயத்தை திரிபுரா அணியில் ஹனுமா விஹாரியுடன் இணைந்து தொடங்கவுள்ளார்.