மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து விமர்சித்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு, விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். "விராட் கோலியின் பெயரைப் பயன்படுத்தாவிட்டால் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு ஓடாது" என்று அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர ஃபார்மில் உள்ளார். இதைக் குறிப்பிட்ட வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர், விராட் கோலியின் ஓய்வு முடிவை விமர்சித்திருந்தார்.

"இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவித்து வருகின்றனர். விராட் கோலிக்குச் சிறப்பான உடற்தகுதி இருந்தும், அவர் டெஸ்ட் வடிவத்திலிருந்து இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. அவர் களத்தில் நின்று போராடியிருக்க வேண்டும்" என்று மஞ்சரேக்கர் பேசினார். 2025-ம் ஆண்டே விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மஞ்சரேக்கரின் இந்தக் கருத்துக்கு விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் மறைமுகமாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "விராட் கோலியின் பெயரைப் பயன்படுத்தாவிட்டால் சிலருக்குப் பொழுது விடியாது, ரொட்டியும், பருப்பும் (உணவு) கிடைக்காது போலிருக்கிறது" என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கோலியை விமர்சித்துப் பேசினால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காகவே மஞ்சரேக்கர் இப்படிச் செய்கிறார் என்று விகாஸ் கூறி இருக்கிறார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இன்னும் ராஜாவாகவே வலம் வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களைக் கடக்க விராட் கோலிக்குச் சில ரன்களே தேவைப்படுகின்றன. இன்னும் 42 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிப்பார்.