கவலைப்படாதீங்க..இனி நாங்க பார்த்துக்குறோம்.. வினோத் காம்ப்ளிக்கு மாதந்தோறும் பண உதவி அளித்த கவாஸ்கர்
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க வீரராக இருந்த வினோத் காம்ப்ளிக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பராக இருந்த வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 சர்வதேச ஒரு நாள் போட்டிகளும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
திறமை வாய்ந்த வீரராக உருவெடுத்த வினோத் காம்ப்ளி, போதை பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். இதன் காரணமாக வினோத் காம்ப்ளிக்கு உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருடைய உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக வினோத் காம்ப்ளி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் மும்பையில் உள்ள பிரபல பயிற்சியாளரான ராம்காந்த் அச்சேர்க்கரின் நினைவு நிகழ்ச்சி மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
அப்போது வினோத் காம்ப்ளியின் நிலையைப் பார்த்த கவாஸ்கர் உங்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும், எனினும் அதற்கு முதலில் நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறியிருந்தார். தற்போது வினோத் காம்ப்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்.
இதனை அடுத்து சுனில் கவாஸ்கர் நடத்தி வரும் சேம்ப்ஸ் என்ற அறக்கட்டளையிலிருந்து மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வினோத் காம்ப்ளிக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று வினோத் காம்பிளியின் மருத்துவ செலவுக்காக ஆண்டு தரும் 30 ஆயிரம் ரூபாய் தரவும் கவாஸ்கர் அறிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன கவாஸ்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து சம்பாதித்து வருகிறார். அவர் வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் கோடி கோடியாக சம்பளம் பெறும் சச்சின், கோலி போன்ற வீரர்கள் யாரும் வினோத் காம்ப்ளிக்கு உதவ முன் வரவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications