மும்பை: சர்வதேச அளவில் புகழின் உச்சியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பெண் சகவாசம், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு வரலாறு உள்ளது. அந்தப் பட்டியலில் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது நண்பர் வினோத் காம்ப்ளி. இந்திய அணிக்காக ஏராளமான போட்டிகளில் ஆடியிருந்தாலும், வெளிநாடுகளில் சோபிக்க தவறியதால், இந்திய அணியில் இருந்து காம்ப்ளி நீக்கப்பட்டார். இவரும், இவரது மனைவியும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர் வீட்டில் பணியாற்றிய பெண் ஊதியம் கேட்டதற்காக, வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து அடித்ததாக புகாரளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வினோத் காம்ப்ளி முற்றிலும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் மஹாயா நிடினி. இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் 1998ஆம் ஆண்டு கிழக்கு லண்டனில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கையில், பெண் ஒருவர் நிடினி மீது பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டை சுமத்தி இருந்தது தெரிய வந்தது. இதன்பின் நீதிமனறத்தில், நிடினி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பட்டியலில் ஷேன் வார்னேவின் பெயர் இல்லயென்றால் தான் ஆச்சரியம். ஏனென்றால் களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் அவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியவர் ஷேன் வார்னே. 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பிய விவகாரத்தில் ஷேன் வார்னே கைது செய்யப்பட்டார். அதன்பின் குற்றம் நிரூபிக்கப்படாததால், வார்னே விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரராக இருந்த முகமது ஆசிஃபும் இந்த பட்டியலில் இருக்கிறார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது, போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். துபாய் ஏர்போர்ட்டில் இவரை பரிசோதித்த போது, இவரிடம் ஓப்பியம் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 19 நாட்களில் முகமது ஆசிஃப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.