மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி தற்போது உடல் நல குறைவில் இருந்து மீண்டு வருகிறார். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய வினோத் காம்ப்ளி, அதன்பின் கடும் சரிவை சந்தித்தார். மது போதையால் தனது வாழ்க்கையை தொலைத்த வினோத் காம்ப்ளி, தற்போது எழுந்து நிற்கவே கஷ்டப்படுகிறார்.
இந்த சூழலில் தானேவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வினோத் காம்ப்ளி வீடு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் வினோத் காம்ப்ளி இரண்டாவது மனைவியான ஆண்ட்ரியா அவரை விவகாரத்து செய்ய இருந்ததாக நேர்காணல் ஒன்றில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து பேசிய அவர், "வினோத் காம்பிளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவரை விட்டு பிரிய நான் முடிவெடுத்தேன். ஆனால் நான் அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவருக்கு உதவி செய்ய யாருமே இருக்க மாட்டார்கள். வினோத் காம்ப்ளி ஒரு குழந்தை போன்றவர்".
"அவரை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கின்றது. அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இது போல் ஒரு சூழ்நிலையில் ஒரு நண்பரை கூட என்னால் பிரிந்து செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது வினோத் காம்ப்ளி நண்பரைவிட என் வாழ்க்கையில் மேலானவர். ஆனால் என் வாழ்க்கையில் பல சமயங்களில் வினோத் காம்ப்ளியை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன்".
"ஆனால் நான் அப்படி சென்றால் எனக்கு அது கவலையை கொடுக்கும். வினோத் காம்ப்ளி சாப்பிட்டாரா? இல்லையா? அவர் சரியாக படுத்து தூங்குகிறாரா? இல்லையா? இப்போது அவர் எப்படி இருக்கின்றார் என்றெல்லாம் எனக்கு தோன்றும். உடனடியாக நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க சென்று விடுவேன். வினோத் காம்ப்ளிக்கு நான் முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன்".
"என்னுடைய மகனும் எங்கள் குடும்ப நிலையை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார். உனக்கு தந்தையும் நான் தான்,தாயும் நான் தான் என்பதை மகன் கிறிஸ்டியானோவிடம் சொல்லி புரிய வைத்திருக்கின்றேன். எனவே என் முகத்தைப் பார்த்து அனைத்தையும் புரிந்து கொண்டு, என்னை அவர் தொல்லையே செல்ல மாட்டார். வினோத் காம்ப்ளியின் தந்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார். கடந்த 2023 ஆண்டு மனைவியை தலையில் தாக்கியதாக அவர் மீது ஆண்ட்ரியா புகார் அளித்து பின் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.