சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாவுக்கு மீண்டும் கோப்பை கிடைக்காது என்றும், தென் ஆப்பிரிக்காதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போவதாகவும் ஒரு பரபரப்புச் செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.
இந்த செய்தி இப்போது காட்டுத் தீ போல படு வேகமாக பரவி வைரல் ஆகியுள்ளது. இந்த செய்தியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அரை இறுதியில் யார் போட்டியிடுவார்கள், இறுதிப் போட்டியில் யார் போட்டியிடுவார்கள் என்பதையும் இது கூறுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று இந்த செய்தி கூறுகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பை கிடைக்கும் என்றும் இது அடித்துச் சொல்கிறது.
மேலும் பிப்ரவரி 22ம் தேதி நடக்கப் போகும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்குமாம்.
என்ன அதிர்ச்சியான விஷயம் என்றால் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அது கணித்துக் கூறியுள்ளது என்பதுதான்.
ஏ பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடிக்குமாம். தனது குரூப்பில் அனைத்துப் போட்டிகளிலும் அது வெல்லுமாம். பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தையும், இந்தியா 2வது இடத்தையும் பிடிக்குமாம்.
நாக் அவுட் பிரிவில், இந்தியா நியூசிலாந்தைச் சந்தித்து அதை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேயை வீழ்த்தும். இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தும். பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தும்.
அரை இறுதிப் போட்டியில், இந்தியாவை, ஆஸ்திரேலியா வீழ்த்துமாம். இலங்கையை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துமாம். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை, தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றுமாம்.
தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறதே...!