இதுக்கு பேரு தான் ஊமைக்குத்து.. ரஹானே விஷயத்தில் பதிலடி கொடுத்த கோலி
சென்னை: எனக்கும் ரஹானேவுக்கும் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல உறவு உண்டு என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
'மனைவிக்கு பிரசவம் நடந்தது ஒரு குத்தமாடா?' என்று தான் வாய்விட்டு விராட் கோலி கேட்கவில்லை. அந்தளவுக்கு அவரையும், ரஹானேவையும் ஒப்பிட்டு பலரும் பல விதமாக பேசிவிட்டார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தலைமையிலான முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு அவர் குழந்தை பிறப்பதன் காரணமாக நாடு திரும்ப, ரஹானே தலைமையேற்ற பின் இரண்டு வெற்றி, ஒரு டிரா என்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி.
கேப்டன்சி, பேட்டிங் என இரண்டிலும் ரஹானே தன்னை நிரூபித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் கோலி கேப்டனாக, தங்கள் இருவருக்குமான புரிதல் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

வெற்றியே முக்கியம்
மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி. ரஹானேவுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்து, அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறோம். அனைவரும் ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறோம், அது அணியின் வெற்றி மட்டுமே.

நல்ல புரிதல் உள்ளது
எனக்கும் ரஹானேவுக்கும் இடையே களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல உறவு உள்ளது. இருவரும் பேட்டிங் செய்யும் போது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பேட்டிங் செய்வோம். மைதானத்துக்கு வெளியேயும் அதிகமாகப் பேசுவோம். எப்போதும் தொடர்பில் இருப்போம்.

நிறைய ஆலோசித்தோம்
ரஹானேவுக்கு அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய திறமை, தகுதி உள்ளது. ஆஸ்திரேலியாவில் போட்டி தொடங்கும் முன் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசித்து தான் இந்திய அணியை வழிநடத்தினார். இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்" என்றார்.

எந்த மோதலும் இல்லை
ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவுக்கு ஆதரவாக பல வெளிநாட்டு வீரர்கள் கருத்துகள் தெரிவித்தனர். கோலி கேப்டன்ஷிப்பில் அவர் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது என்று மோதல் ஏற்படுத்தும் தொனியில் பேசி வந்தனர். அனைத்துக்கும் தனது ஓபன் ஸ்டேட்மென்ட் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கேப்டன் கோலி.


Click it and Unblock the Notifications