பெங்களுர்: விஜய் ஹசாரே டிராபியில் 27 வயதான குஜராத் சுழற்பந்து வீச்சாளர் விஷால் ஜெய்சால், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அவர்களை சதம் அடிக்க விடாமல் தடுத்தார். இதன் மூலம் யாருடா அந்த பையன் என்று ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே அந்த வீரர் குறித்து தேடினர்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் பயிற்சி மையத்தில் நடந்த Elite Group D போட்டியில், டெல்லி அணியின் 22வது ஓவரில், 61 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த கோலி ஜெய்சால் சுழலில் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றினார். சதத்தை எட்டவிருந்த கோலிக்கு ஜெய்சால் அதிர்ச்சி கொடுத்தார்.

கோலியின் விக்கெட்டைத் தவிர, டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் 79 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜெய்சால் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அர்பித் ராணா மற்றும் நிதீஷ் ராணா விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஜெய்சால், 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
போட்டி முடிந்ததும், ஜெய்சாலுக்கு கோலியிடம் ஆட்டோகிராஃப் கேட்கும்போது அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கோலி அவரைப் பாராட்டி, தொடர்ந்து கடினமாக உழைக்குமாறு ஊக்கமளித்தார்.இதுவரை 13 லிஸ்ட் ஏ போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த ஜெய்சால், கோலிக்கு எதிராக எந்த குறிப்பிட்ட திட்டமும் வகுக்கவில்லை என்றார். "அவர் ஒரு ஜாம்பவான். அவருக்கு எதிராக பந்துவீசுவதே பெரிய தருணம். களத்தில் அவர் இருக்கும்போது மிகப்பெரிய அழுத்தம் இருக்கும்," என்று விளக்கினார்.
தொடர்ந்து, "கோலியிடம் பேசியபோது, அழுத்தமான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது, உடற்தகுதி போன்ற ஆலோசனைகள் கிடைத்தன. அவரை வீழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு ஜாம்பவானின் விக்கெட்டைப் பெறுவது மிகவும் சிறப்பானது," என ஜெய்சால் தெரிவித்தார்.
குஜராத்தின் நாடியாடைச் சேர்ந்த ஜெய்சால், அக்சர் படேல் பயின்ற அகாடமியிலேயே தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். அக்சர் அவரது வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். "கிரிக்கெட் கிட் முதல் பேட் வரை அக்சர் பாய் எனக்கு பெரிதும் உதவினார்," என்று ஜெய்சால் குறிப்பிட்டார்.
"நான் அவரை உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன். அக்சர் படேல் போல சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வர விரும்புகிறேன். ஆட்டத்தின் போக்கை மாற்றுவது, ரன் விகிதம் கட்டுப்படுத்துவது, மனரீதியாக வலிமையாக இருப்பது போன்றவற்றை அவர் எனக்குக் கற்றுக்கொடுக்கிறார்." என்று தெரிவித்தார்.