மும்பை: 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்றால் விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதனை ஏற்காத கோலி, ரோஹித் பலமுறை தங்களுடைய திறமையை நாங்கள் நிரூபித்து விட்டோம் என்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மற்ற இளம் வீரர்களின் வாய்ப்பு பறிபோகும் என்றும் கூறி வந்தனர்.

மேலும் விராட் கோலி, லண்டனில் வசித்து வருவதால் இந்தியா அணிக்காக விளையாடும் போது மட்டும் தான் தாயகம் திரும்புகிறார். இந்த நிலையில் தேர்வுக்குழு உறுப்பினரான பிரக்யான் ஒஜா, கம்பீர் மற்றும் விராட் கோலி உடன் இணைந்து ராய்ப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் உடல் தகுதியை பேணி காப்பது முக்கியம் என்றும், அதைவிட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் மேட்ச் பிராக்டீஸ் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பெரும்பாலான வீரர்கள் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால், தங்கள் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தால் அது சரியாக இருக்காது என்று ஒஜா கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்வு குழுவின் இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட விராட் கோலி, விஜய ஹசாரே கோப்பை தொடரில் விளையாட முடிவெடுத்திருக்கிறார். அதன்படி வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஆந்திரா அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
இந்த தகவலை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரான ரோகன் ஜெட்லி உறுதிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். தென்னாப்பிரிக்கா தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜனவரி மாதத்தில் தான் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
இடையில் உள்ள காலத்தில் விஜய் ஹசாரே கோப்பை நடைபெற இருக்கிறது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று சொல்லி ஓய்வு பெற போகிறார்கள் என எதிர்பார்த்த நிலையில், நீங்கள் எத்தனை கட்டை போட்டாலும் அதில் நாங்கள் முறியடித்து வருவோம் என்பது போல் இருவரும் ஓகே சொன்னது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.