மும்பை : ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து விராட் கோலி சக வீரரான சுப்மன் கில்லை திட்டுவது போல் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. எப்போதெல்லாம் ஒரு நல்ல தொழில்நுட்பம் வருகிறதோ அதனை வைத்து நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த ஒரு கூட்டம் இருக்கும்.
அதே போல் அந்தத் தொழில்நுட்பத்தை வைத்து கெட்ட விஷயங்களை செய்யும் கும்பலும் காலம் காலமாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு அனுப்பிளவை வைத்து மின்சாரமும் உருவாக்கலாம். அதை வைத்து குண்டு தயாரித்து அழிக்கவும் செய்யலாம். இப்படி ஏஐ என்ற தானாக இயங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பல விஷயங்கள் செய்யப்படுகிறது.

நம்மை விட்டு பிரிந்து சென்ற பல கலைஞர்களின் குரலை செயற்கையாக உருவாக்கி பாடலுக்கு பயன்படுத்துவது, உயிரிழந்த கலைஞர்களை மீண்டும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் திரைக்கு கொண்டு வருவது என்ற பல நல்ல விஷயங்கள் நடக்கிறது. அண்மையில் லால் சலாம் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலை பயன்படுத்தி ஒரு பாடலையே ஏ ஐ மூலம் உருவாக்கினார்.
இதேபோன்று மறைந்த நடிகர் விவேக் உருவத்தை ஏஐ மூலம் பயன்படுத்தி இந்தியன் 2 படத்தில் இயக்குனர் சங்கர் கொண்டு வந்தார். இப்படி தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த ஒரு குழு இருந்தாலும் இதனை வைத்து தீங்கு செய்ய ஒரு குழு இருக்கிறது. உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் குரலையும் அவர் பேசுவது போலவும் வீடியோவை தயாரித்து இந்த பொருளை வாங்குங்கள், முதலீடு செய்யுங்கள் என்று பொய்யாக ஒரு வீடியோவை ஒரு கும்பல் அண்மையில் தயாரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோன்று ராஷ்மிகா மந்தானாவை கவர்ச்சியாக ஏஐ மூலம் உருவாக்கி வீடியோவை சமூக வலைத்தளத்தில் சிலர் வெளியிட்டனர். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது விராட் கோலி சிக்கியிருக்கிறார். விராட் கோலி எப்போதுமே இளம் வீரர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அவர் பல சாதனைகளை செய்தாலும் அனைத்தையும் தலைக்கு அவர் ஏற்றிக் கொண்டது கிடையாது.
இந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய இளம் வீரரான கில்லை அவமதிக்கும் விதமாக பேசி இருப்பது போல் ஒரு வீடியோ உருவாக்கி இருக்கிறது. அதில், "கில்லை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன். கில் நிச்சயம் திறமையான வீரர் தான். ஆனால் தாம் எதிர்காலத்திற்கான வீரர் என்று காட்டிக் கொள்வதற்கும் ஜாம்பவானாக உருவெடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கில்லால் அடுத்த விராட் கோலியாக எல்லாம் ஆக முடியாது. ஏனென்றால் விராட் கோலி ஒருவர் மட்டுமே.
இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி மட்டும் தான் பெஞ்ச் மார்க். இந்த நிலையை அடைய வேண்டும் என்றால் கில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று விராட் கோலி கூறி இருப்பது போல் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலியின் உண்மையான வீடியோவில் சில வார்த்தைகளை பயன்படுத்தி ஏ ஐ மூலம் செயற்கையாக விஷக்கிருமிகள் கில்லை தவறாக விராட் கோலி பேசுவது போல் வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது உண்மை கிடையாது.