லண்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் தங்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி தனது காதல் மனைவியை கரம் பிடித்த பிறகு மும்பைக்கு குடியேறிவிட்டார்.
இந்த நிலையில் விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய கடைசி அத்தியாயத்தை நெருங்கி விட்டார். ஏற்கனவே டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒரு நாள் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி வருகிறார்.

விராட் கோலி தமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் லண்டனுக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார். முதலில் விராட் கோலி குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அவர் கிரிக்கெட்டுக்கு பிறகு லண்டனில் குடியேற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இலங்கை தொடர் முடிந்த உடனும், கோலி லண்டனுக்கு சென்றுவிட்டார்.
மனைவி அனுஷ்கா சர்மா தற்போது லண்டனில் இருக்க விரும்புகிறார். இதனால் தான் தனது இரண்டாவது குழந்தையை லண்டனில் அனுஷ்கா ஷர்மா பெற்றெடுத்தார். மேலும் லண்டனில் விராட் கோலி தொழில் தொடங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. விராட் கோலி ஒரு காலத்தில் நிறைய சொகுசு கார்களை வாங்கி வைத்திருந்தார்.
ஆனால் தற்போது அதையெல்லாம் பெரிய அளவில் பயன்படுத்த முடியாததால் விற்றுவிட்டு அதனை தொழிலில் முதலீடு செய்து இருக்கிறார். அனுஷ்கா சர்மாவுக்கும் தற்போது வயதாகி விட்டதால் பெரிய அளவில் ஹீரோயின் வாய்ப்பு பாலிவுட்டில் வரவில்லை. மேலும் இந்தியாவில் இருக்கும்போது தங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை என்று இந்த தம்பதிகள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதில் லண்டனுக்கு சென்றால் தாங்கள் சுதந்திரமாக வெளியே சென்று வர முடிவதாகவும், இதனால் ஆண்டு தோறும் அங்கு சென்று வருவது ஒரு நல்ல உணர்வைத் தருவதாக விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த சூழலில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் அனுஷ்கா சர்மா லண்டனில் வசித்து வருவதால் இருவரும் அங்கே குடியேற திட்டமிட்டு இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக இது போல் வெளிநாடுகளில் தங்கி வருவது புதிதல்ல. நம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். நடிகர் சூர்யாவும் சென்னையை விட்டு தனது குடும்பத்தினருடன் மும்பையில் குடியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.