லண்டன்: 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. பார்படாஸில் இருந்து 4 நாட்களுக்கு பின் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றிப் பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இந்திய வீரர்களை கொண்டாடினார்கள்.
இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள், அங்கிருந்து தங்களது குடும்பத்தினரை சந்திக்க வீட்டிற்கு புறப்பட்டனர். அன்றைய நாள் இரவு நட்சத்திர வீரர் விராட் கோலி மும்பை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டார். லண்டன் விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

அதன்பின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாய் இருவரையும் விராட் கோலி சந்தித்தார். விராட் கோலி லண்டனுக்கு புறப்பட்ட விவகாரம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தாண்டு தொடக்கம் முதலே விராட் கோலி இந்தியாவில் இருப்பதில்லை. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது கூட திடீரென லண்டன் சென்று வந்தார்.
அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது 2வது குழந்தை பிரசவத்திற்காக லண்டன் பறந்தார். அதன்பின் விராட் கோலி மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். அனுஷ்கா சர்மா ஐபிஎல் போட்டிகளின் போது இந்தியா வந்திருந்தார். அதன்பின் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை மட்டுமே நேரில் பார்க்க வந்தார்.
தொடர்ந்து அவரும் நேரடியாக லண்டன் பறந்தார். இதனால் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் மும்பையை காலி செய்துவிட்டு லண்டனில் செட்டிலாக முடிவு செய்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்பதாலும், குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் பேசுபொருளாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றுக்காக மட்டுமே விராட் கோலி இனி இந்தியாவுக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.