கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ரிசர்வ் டேவான நேற்று முடிவடைந்ததால், இந்திய அணி அடுத்த நாளிலேயே மீண்டும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் காயமடையும் அபாயமும் உள்ளது. இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

அதேபோல் உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் இந்திய வீரர்கள் 3 நாட்கள் தொடர்ந்து விளையாடி காயமடைந்தால் யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் காயத்தில் இருந்து நீண்ட மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளனர்.
அதேபோல் அவர்கள் பேட்டிங் ஃபார்மிற்கு திரும்ப போதுமான ஆட்ட நேரம் கொடுக்க வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியில் பதிரானா, தீக்சனா, வெல்லாலகே உள்ளிட்டோர் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்து, ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. அதேபோல் பும்ராவுக்கும் ஓய்வு கொடுத்து அவருக்கு பதிலாக ஷமிக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் குறைந்தது 2 மாற்றங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட தொடராக அமைந்துள்ள உலகக்கோப்பை தொடரை வெல்ல விராட் கோலி மற்றும் பும்ரா இருவருமே தீவிரத்தன்மையுடன் இருப்பது அவசியமாகும்.
இதனால் அவர்களை காயமடையாமல் உலகக்கோப்பை தொடருக்கு அழைத்து சென்றாலே, இந்திய அணி பாதி வெற்றியை எட்டிவிடலாம். அதேபோல் மிடில் ஆர்டர் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அவர்களின் முழு ஃபார்முக்கு திரும்பினால் இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது. இதன் காரணமாகவே இன்றைய ஆட்டத்தில் இருவரும் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது.