மொஹாலி : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி கேப்டனாக களமிறங்கினார். காயம் காரணமாக டுபிளசிஸ் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தொடக்க ஜோடியான டுபிளசிஸ், கோலி Fevicol போட்டு ஓட்டியது போல் களத்தில் நின்றது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினர். முதலில் கோலி அதிரடி காட்டி பிறகு அமைதியாக, டுபிளசிஸ் ரன் வேட்டையில் ஈடுபட்டார்.

31 பந்துகளில் டுபிளஸிஸ் அரைசதம் கடந்துள்ளார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரியும் அடங்கும். ஆனால் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சரியத் தொடங்கியது. எனினும் அதனை சரி செய்ய கோலி அவ்வப்போது பவுண்டரி அடித்தாலும் 40 பந்துகளில் தான் அரைசதம் கடந்தார்.
விராட் கோலி இறுதியில் 47 பந்தில் 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் குவித்தது. அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, ஹர்பிரித் பிராருக்கு ஹாட்டிரிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவரால், தொடர்ந்து 3வது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

சிறப்பாக விளையாடிய டுபிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது,