மும்பை: ஆசிய கோப்பையை இந்திய அணி 8வது முறையாக வென்ற பிறகு 12 ஆண்டு கால உலகக்கோப்பை கனவை இந்திய வீரர்கள் நிறைவேற்றுவார்கள் என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற விராட் கோலி மட்டும் தான் நடப்பு தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் எல்லையற்ற ஆதரவு தான். கிரிக்கெட் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு தான் எங்களை உழைக்க வைக்கிறது.2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நாம் பெற்ற வெற்றி இன்னும் நமது மனதை விட்டு நீங்கவில்லை.
தற்போது புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த உலகக் கோப்பையிலும் நான் இடம்பெற்றது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களின் கனவுகளை மெய்ப்படுத்துவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம் என்று விராட் கோலி கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஜடேஜா கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்காக இருக்கும்போது உங்களுக்காக ஆதரவளிக்கும் போது கிடைக்கும் உத்வேகம் ஒரு கிரிக்கெட் வீரராக எங்களுக்கு வேறு எதிலும் கிடைக்காது. இந்த உலகக் கோப்பையில் நாங்கள் வெல்ல வேண்டும் என்பது அனைத்தும் ரசிகர்களின் ஏக்கத்திற்காக தான். ஒரு தேசமாக நாம் அனைவரும் இணைந்து இந்த வெற்றிப் பயணத்தில் ஈடுபட உள்ளோம். நிச்சயமாக இம்முறை ரசிகர்களை நாங்கள் பெருமைப்படுத்துவோம் என்று ஜடேஜா கூறியுள்ளார்.