மும்பை: இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தவர் அமித் மிஸ்ரா. ஆனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் எழுச்சி காரணமாக, அமித் மிஸ்ராவால் இந்திய அணியில் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதுவரை 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா, மொத்தமாக 156 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி, ஐதராபாத், லக்னோ உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். 41 வயதாகும் அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது ஏன் என்பது குறித்து அமித் மிஸ்ரா பேசி இருக்கிறார்.

அதில், இந்திய அணியின் தேர்வு திறமையை மட்டும் பார்த்து செய்யப்படவில்லை. கேப்டன்கள் தங்களின் விருப்பத்திற்குரிய வீரர்களை தேர்வு செய்து வந்தனர். களத்தில் மட்டும் சிறப்பாக செயல்படுவது அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. பிளேயிங் லெவனை எப்போதும் கேப்டன் தான் முடிவு செய்வார். அதேபோல் எனக்கும் தோனிக்கும் இடையில் மிகச்சிறந்த புரிதல் இருந்தது.
ஆனால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்பது குறித்து கேட்கும் போது, நான் இந்திய அணியின் காம்பினேஷனில் பொருந்தவில்லை என்று தெரிவித்தனர். நான் எந்த கோரிக்கையும் வைக்காமலேயே எனக்கு ஓய்வு கொடுத்தனர். அந்த நேரத்தில் நான் 10 டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடவில்லை. ஆனால் தோனியின் முடிவு குறித்து கேள்வி எழுப்பும் இடத்தில் நானும் இல்லை.
பயிற்சியாளர்களிடம் கேட்ட போதும், தோனியிடமே நேரடியாக கேட்குமாறு கூறிவிட்டனர். மீண்டும் மீண்டும் பேசிய போதும், எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாக கூறினர். ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணிக்கு எதிரான விளையாடினோம். அப்போது எனது எதிர்காலம் குறித்த கேட்ட போது, என்னிடம் திரும்பி வருவதாக கூறினார்கள். 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்ததற்கு, விராட் கோலியின் பங்கு முக்கியமானது.
அந்த நேரத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தேன். அதேபோல் இலங்கை பிட்ச்களில் இந்திய அணிக்கு ஒரு நல்ல லெக் ஸ்பின்னர் தேவையாக இருந்தது. பின்னர் இந்திய அணியில் இணைந்த போது, விராட் கோலி என்னை அவருடன் பயிற்சி செய்ய அறிவுறுத்தினார். அதற்கு அவரிடம், என்னால் அதிகபடியான எடையை தூக்கி உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனை தவிர்த்து வேறு பயிற்சியில் ஈடுபட தயாராக உள்ளேன் என்று கூறினேன்.
அதன்பின் எனது எதிர்காலம் குறித்து விராட் கோலியிடம் கேட்ட போது, எனக்கு எந்த தெளிவான பதிலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் நேரடியாக விராட் கோலி மெசேஜ் அனுப்பி கேட்டேன். அதனை பார்த்துவிட்டு, நிச்சயம் சொல்வதாக கூறினார். ஆனால் ஒருநாளும் விராட் கோலி சரியான பதிலை அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.