மும்பை : விராட் கோலி ,ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டி20 இனி விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இதை போன்று ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் அடுத்த இளம் படையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை இந்திய அணியில் நிரப்புவது என்பது யாராலும் முடியாத காரியம். டி20 மட்டுமல்ல எந்த கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் சரி. இந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய சேவகர்களாக இவ்விருவரும் இருந்திருக்கிறார்கள். டி20 யை பொருத்தவரை அவர்களுக்கு சிறந்த ஒரு வழியனுப்பு தருணம் கிடைத்திருக்கிறது.விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது போல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே சச்சின், தோனி போன்றவர்கள் தான். இன்னும் நாம் அடுத்த சச்சின் தோனியை கண்டுபிடிக்கவில்லை என்று கபில்தேவ் கூறியுள்ளார். கபில்தேவ் இந்திய அணியின் ஆல் ரவுண்டாக இருந்த நிலையில் அவருக்கு பிறகு இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் வந்தாலும் இன்னும் அவருடைய இடத்தையே இன்னும் நிரப்ப முடியாமல் இந்தியா இருக்கின்றது.
இந்த சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி, சச்சின் போன்ற வீரர்கள் இடத்தை நிரப்புவது என்பது கடினம் தான். ஆனால் நாம் இந்த வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று யோசிக்காமல் புதிய ஒரு வீரர் புதிய சகாப்தத்தை விராட் கோலி போல் படைக்க வேண்டும் என்று நினைத்து தேர்வு குழுவினர் தேடினால் மட்டுமே பலமான இந்திய அணியை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.