மும்பை : இந்திய அணி வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதமும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் நவம்பர் டிசம்பர் மாதமும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சம் ஏழு அல்லது எட்டு ஆட்டங்களில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா அஸ்வின் போன்ற சீனியர்கள் விளையாடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கம்பீர் அறிவுறுத்தினார். இதனை அடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டி20 உலக கோப்பை வென்ற பிறகு தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் கம்பீர் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றத்தை எடுத்து சீனியர்கள் ஒருநாள் அணிக்கு திரும்பினால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தங்களது சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய அணி இனி செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தான் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் மீண்டும் இந்திய அணி சீனியர் வீரர்கள் சுற்றுலாவுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் தான் துலீப் கோப்பை டெஸ்ட் போட்டிகள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சீனியர் வீரர்கள் பங்கேற்று விளையாடினால் வீரர்கள் நன்றாக பயிற்சி பெற முடியும் என்று கம்பீர் நம்பினார். ஆனால் இதற்கு ரோகித் சர்மாவும் விராட் கோலியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரிகிறது. தாங்கள் தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் தங்களது உடல் தகுதி பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
பெரிய டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு முன்பு கொஞ்சம் ஓய்வு தேவை என்பதால் தங்களால் துளிர் கோப்பையில் விளையாட முடியாது என பிசிசிஐ இடம் முறையிட்டு இருக்கிறார்கள்.
இதை அடுத்து சீனியர் வீரர்களின் பேச்சை கேட்ட பிசிசிஐ ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ,அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு துலீப் கோப்பையில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இது கம்பீரை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.